கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, February 26, 2006

நேயர் விருப்பம் - 5

நேயர் விருப்பம் போட்டு கிட்டத்தட்ட 2 மாதம் ஆகி போச்சு. இன்று சில அருமையான பாடல்களை நேயர் விருப்பத்தில் கேட்கலாம். எல்லாமே ராஜா பாட்டுத்தான் (வேற பாட்டு தான் நம்ம கிட்ட கெடையாதுல்லா).

முதலில் உஷா அக்கா ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த பாடலை கேட்டிருந்தார்கள். 'நான் உந்தன் தாயாக வேண்டும்' ஜானகியின் குரலில் 'உல்லாச பறவைகள்' படத்தில் இருந்து. ஜானகியின் குரல், பாடும் விதம் இந்த பாடலில் ரொம்ப அருமை. உல்லாச பறவைகளில் மற்ற பாடல்கள் அளவுக்கு பாடல் ஏனோ பிரபலமாகவில்லை என்று நினைக்கிறேன். பாடலை பற்றி உஷா அக்கா நிறைய சொல்வார்கள் :-)





கீதா எங்கே இருந்து தான் பாட்ட புடிப்பாங்கன்னு தெரியலை. முன்பு 'அம்மா' என்று ஒரு படம் சொன்னாங்க..இப்போ 'சிவப்பு மல்லி' என்று ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலை கேட்டிருக்காங்க. நீங்க சொல்லி தான் இப்படி படமெல்லாம் நான் கேள்வி படறேன். எங்கே இருந்து புடிக்கிறீங்க. நான் உங்க ஆளவுக்கு பாட்டு கேட்டதில்லை கீதா :-). 'ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்..தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்' ரொம்ப நல்லா கேட்ட பாட்டு. ஆனால் என்னிடம் இல்லையே கீதா :-(.

அதனால் நீங்க ரொம்ப நாளைக்கு முன்பு கேட்ட 'இளையநிலா பொழிகிறது' கொடுக்கிறேன். சுந்தர் வநது 'பாடும் நிலா பாலு' வில் போடாம இங்கே போட்டு ஏன்யா ராஜா பாட்டா மாத்துறீங்க. அது எஸ்.பி.பி பாட்டுய்யா என்று சொல்ல போகிறார். இந்த பாடலை பற்றி எல்லோருக்கும் நிறைய தெரிந்திருக்கும். இந்த பாடலில் இரண்டாவது prelude-ல் வரும் தனி கிடார் இளையராஜாவே வாசித்தது என்று கேள்வி பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இப்போ பாட்டு.





நம்ம தங்க்ஸ் (Thangs) எல்லா நேயர் விருப்பத்திலும் அழகாக ஒரு பாடலை கேட்பார். 'யேசுதாஸ்' பதிவை பார்த்துவிட்டு அவர் கேட்டப் பாடல் 'என் ஜீவன் பாடுது..உன்னைத் தான் தேடுது' பாடலை கேட்டிருந்தார். 'நீ தானா அந்த குயில்' படத்தில் இருந்து ராஜாவில் இசையில். யேசுதாஸின் தொடக்க ஹம்மிங் அருமை. எனக்கும் பிடித்த ஒரு யேசுதாஸ் பாடல் இது.





இறுதியாக, வினதா அக்காவின் விருப்பத்தில் மீண்டும் ஒரு ஜானகி பாட்டு ( அது என்ன உஷா அக்காவும், வினதா அக்காவும் ஒரே மாதிரி ஜானகி பாட்டா கேட்டிருக்கீங்க). 'தந்துவிட்டேன் என்னை' படத்தில் இருந்து 'கண்களுக்குள் உன்னை எழுது'. டைரக்டர் மகேந்திரன் இயக்கத்தில் வந்த படம். இந்த பாட்டில் நிறைய இசை விசயம் இருக்கு என்று நினைக்கிறேன். வினதா அக்கா சொல்வார்கள். மற்ற படி ஒரு ரிப்பீட் பீட்டில் ராஜா ஒவ்வொரு இசையாக சேர்ப்பது ரொம்ப அழகாக இருக்கும் (interlude). ஜானகி ரொம்பவே அனுபவித்து பாடி இருப்பார். இதே போல இன்னொரு பாட்டு சொல்லனுமா 'உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' படத்தில் இருந்து 'காலை குயில்களே' பாடலை சொல்லலாம். இப்போ விருப்பப் பாடல்,




Wednesday, February 22, 2006

உயிரே! உயிரே! உருகாதே! ( யேசுதாஸ்- 1)

யேசுதாஸ். கர்னாடக சங்கீதத்திலும், அதே சமயத்தில் திரை இசையிலும் கோலோச்சிய ஒரு ஜாம்பவான். அவரோட குரலுக்கு உருகாதவர் இருக்க மாட்டார்கள். என்னோட புடிச்ச பாடகர் பட்டியலில் ஏனோ எஸ்.பி.பி, அருண்மொழி, ஜெயசந்திரனுக்கு அப்புறம் தான் யேசுதாஸ் வருகிறார். அதற்கு ஒரே காரணம், எனக்கு கொஞ்சம் கர்னாடிக்கா இருந்தாலே என்னோட அறிவுக்கு அப்பாற்பட்டது போல் ஆகி விடுகிறது. நம்ம அறிவு அவ்வளவு தான். என்ன பண்ணுறது :-)

இந்த யேசுதாஸையே குத்தாட்டம் போட வைத்த ராஜா வாழ்க :-) ( 'தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நானு' - சிந்து பைரவி). செம பாட்டு. சிரிச்சிக்கிட்டே கேட்க ஒரு பாட்டு. யேசுதாஸும் கலக்கி இருப்பார்.

கர்னாடக சங்கீதம் அலர்ஜியான என்னை போல பாமரனும் ரசிக்கும் வகையில் கர்னாடக சங்கீதம் கொடுக்க ராஜாவை விட்டா யார் உண்டு?. இந்த பதிவில் ஒரே படத்தில் இருந்து அப்படி ரெண்டு கிளாசிகல் பாட்டு..கேட்கலாமா..

'ஒருவர் வாழும் ஆலயம்'. சிவகுமார்-ரகுமான் - பிரபு நடித்து நல்ல கதையோடு வந்த படம். இதில் சிவகுமார் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியார். பாட்டு வாத்தியார் என்றாலே ஒரு அழகான பொண்ணு இருக்கணுமேன்னு கேக்கறீங்களா...அதே..கை கொடுங்க..தமிழ் சினிமா என்ன மாதிரியே நெறைய பாப்பீங்க போல...அப்புறம் நம்ம ஹீரோவுக்கு என்ன வேலை..அதே..பாட்டு கத்துக்கொடுங்க மாஸ்டர் (மாமா :-) அப்படின்னு போய் நிற்க வேண்டியது..அப்புறம்..எல்லாம் தெரியும் தானே..

இப்படி பட்ட படங்களில் ஒரே புண்ணியம்..நல்ல பாட்டுக்கு உத்திரவாதம் கொடுத்திருவாங்க. இந்த படத்தில் சிவகுமார் பாட்டு வாத்தியார். பாட்டு கத்துக்க போகும் மாணவன் ரகுமான். பொண்ணு பேரு தெரியலைங்க. பாட்டு அத்தனையும் அருமையோ அருமை..இங்கே கொடுக்க போகும் யேசுதாஸ் பாட்டு ரெண்டு..மனோவின் 'சிங்கார பெண் ஒருத்தி' மலேசியா- சித்ரா குரலில் 'மலையோரம்..விளையாடும் ' (கீதா ஏற்கனவே இதை போட்டுட்டாங்க), எஸ்.பி.பி-யின் 'பல்லவியே சரணம்' 'வானின் தேவி வருக'..இப்படி ஒரே படத்தில் எல்லோருக்கும் தீனி..நமக்கும் சேர்த்து தான்..

அதில் இருந்து இரண்டு தான் இந்த பதிவில்.

முதல் பாடல். 'நீ பௌர்ணமி..என்றும் என் நெஞ்சிலே'. இறந்து போன மனைவியை நினைத்து சிவகுமார் பாடும் பாட்டு. கண்ண மூடிக்கிட்டே கேட்டு பாருங்க. உங்களை எங்கோ எடுத்துச் செல்லும் இந்த பாட்டு. அருமையான வீணை, தபேலா இசை. யேசுதாஸ் குரலில் பாடல் கம்பீரமாக ஒலிக்கும். ராகதேவனின் இன்னொரு ராஜகீதம். இங்கே.





இப்போ தலைப்பு பாடல். 'உயிரே! உயிரே! உருகாதே'. எனக்கு பிடித்த யேசுதாஸ் பாடலில் முதல் இடம் இந்த பாட்டுக்கு தான். உயிரை உருக்கும் ஒரு பாடல். இந்த பாடலை ரொம்ப உருக்கமாக படத்தில் படமாக்கி இருப்பார்கள். சிவகுமார் சாவின் விளிம்பில் இருந்து பாடும் பாடல். எதிர்பாட்டு அவரது மகளாக வருபவர் பாடுவது போல வரும். யேசுதாஸ் ரொம்பவே அழகாக குரலில் சோகத்தை, இயலாமையை கொண்டுவந்திருப்பார். ஜானகியை சொல்லவும் வேண்டுமா..ராஜாவின் டாப் 100ல் இந்த பாடலையும் வைக்கிறேன். உயிரே! உயிரே உருகாதே..உருகாமல் இருக்க முடியுமா..முயற்சி பண்ணுங்க..இங்கே..





இப்போதெல்லாம் இப்படி சங்கீத படங்கள் வருவதில்லை..ம்ம்ம்ம்ம்ம். :-(

Tuesday, February 21, 2006

காதல் ஓவியம்

இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா. நம்மை ஏங்க வைக்கும் ஒரு கூட்டணி. அதில் ஒரு மகுடம் இந்த காதல் ஓவியம். 1982-ல் வந்த படம். இன்று வரை எனக்கு பார்க்க கொடுத்து வைக்கவில்லை. வியாபார ரீதியாக வெற்றியடையாதது ஏன்?. என்ன கதை?. எங்கே இவர்கள் தோற்றார்கள்?. விவரம் அறிந்தவர்கள் கூறுங்கள். வைரமுத்து இந்த படத்தை பற்றி 'நாங்கள் படத்தில் தோற்றிருக்கலாம். ஆனால் பாடலில் ஜெயித்தோம்' என்று கூறியிருப்பார். உண்மை தான். அந்த வெற்றிக்கு இந்த மூவரை தவிர இன்னொருவருக்கும் பங்கு உண்டு. அது பாடகர் எஸ்.பி.பி. இந்த நான்கு பேரில் யார் பங்கு அதிகம் இருந்ததென்று கேட்டால், அனைவருமே அவர்களுடைய முழுத்திறமையையும் காட்டி இருப்பார்கள் என்றே கூற வேண்டும்.

படத்தில் மொத்தம் 8 பாடல்கள். இப்படி ஒரு படத்தை இயக்கி, ராஜாவிடம் பாடல் வாங்கிய பாரதிராஜா, அத்தனை பாடல்களையும் கவிதையாக்கிய வைரமுத்து, பாடலின் வரிக்கு வரி உயிர் கொடுத்து பாடிய எஸ்.பி.பி. இசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ?.

முத்துகுமரன் ரொம்ப நாளாக இந்த பதிவை கேட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் அவரிடம் இருந்து இந்த படத்தை, பாடல்களை பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்.

மொத்தம் 8 பாடல்களில் 6 பாடல்கள் எஸ்.பி.பி. ஒன்று ஜானகியின் தனிப்பாடல் (நாதம் என் ஜீவனே). 'பூஜைக்காக' மட்டும் தீபன் சக்கரவர்த்தி. அத்தனை பாடல்களையும் கொடுக்கிறேன் (முதன் முதலாக. என்னால் சில பாடல் என்று தேர்வு செய்ய முடியவில்லை).

இந்த இடத்தில் கவிதை நன்றாக இருக்கிறது. இந்த இடத்தில் எஸ்.பி.பி நன்றாக பாடி இருக்கிறார். இந்த இடத்தில் இசை நன்றாக இருக்கிறது என்று பிரிக்க முடியாத காவியம் இது. அதனால் பாடலை அப்படியே போடுகிறேன். உங்களுக்கு தெரிந்ததை, தோன்றுவதை சொல்லி விட்டுச் செல்லுங்கள் (முக்கியமா முத்துகுமரன் :-)

1. வெள்ளிச சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது.






2. ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது..
என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது
(அம்மா அழகே)






3.நாதம் ஒன்று போதும்..எந்தன் ஆயுள் கோடி மாதம்..
தீயில் நின்ற போதும்..அந்த தீயே வெந்து போகும்.
( பூவில் வண்டு)






4. விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
( சங்கீத ஜாதி முல்லை)
( இந்த பாடலை பற்றி பேச நிறைய இருக்கும். இல்லையா?)






5. நாதம் என் ஜீவனே..வா வா என் தேவனே






6. குயிலே..குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ.






7. சலங்கை ஓசை போதுமே..எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
(நதியில் ஆடும் பூவனம்)






8. பூஜைக்காக வாழும் பூவை ( இது தீபன் சக்கரவர்த்தி பாடியது)






Thursday, February 16, 2006

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 1

தபேலா - ராஜாவுக்கு மிகவும் பிடித்தமான வாத்திய கருவி போல. அவரது 70% (குறைந்தது) பாடல்கள் தபேலாவை ஒட்டி தான் வரும். அதிலும் அவரது மெலோடி பாடல்கள் ('முத்து மணி மாலை' 'நிலவே முகம் காட்டு') எல்லாம் ஒரே மாதிரியான தபேலா மெட்டில் தான் இருக்கும். தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே அடி தான். டக்க..டக்க..டக்க அப்படின்னு ரிப்பீட்டு தான் (தலேபா வாசிப்பவர் கொடுத்து வச்சவர்). அதற்கு அவர் அந்த பாடல்களில் மெலோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இசை வித்தைகளை அடக்கி வாசித்திருப்பார்.

ராஜாவின் மொத்த பரிமாணங்களையும் வெளிக் கொண்டுவரும் பாடல்கள் மேடைப் பாடல்கள் தான். அதாவது மேடையில் ஆடி பாடி ஆடுவது போல வரும் பாடல்கள் தான். கலர் கலராக விளக்குகள் வெட்டி வெட்டி எரிய, குழுவினர் ஆட, கதாநாயகியோ, கதாநாயகனோ பாடுவது போல வரும் பாடல்களில் ராஜா நம் செவிக்கு நல்ல தீனி போட்டிருப்பார். அதில் சில பாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாதிரி பாடல்கள் இப்போ வரும் படங்களில் காண முடிவதில்லை. அப்படி ஒன்னொன்னு வந்தாலும், காது தான் கிழியுது :-).

இது போன்ற பாடல்களில் ராஜா தபேலாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, டிரம்ஸ், ட்ரம்பட், எலக்ட்ரிக் கிடார் என்று கலக்கு கலக்கு என்று கலக்கி இருப்பார்.

முதல் பாடல், 'வா வா பக்கம் வா'. 'தங்க மகன்' படத்தில் இருந்து. வாணி ஜெயராம் பாடிய வெகு சில ராஜா பாடல்களில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாடல். ரஜினிக்கு எஸ்.பி.பி-ய விட்டா வேறு ஆள் உண்டா?. ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல். பாடலின் தொடக்கமே தூக்கலாம இருக்கும். போங்கோ (pongo) மாதிரி இரு வாத்தியத்தில் ஆரம்பிக்கும். அதோடு ட்ரம்பட் (Trumpet/Sax) சேர்ந்து அப்படியே ஒன்னொன்னா சேர்ந்துக்கிட்டே இருக்கும். கலக்கல் ஆரம்பம். பல்லவியில் ஒவ்வொரு வரி முடிந்தவுடன் குட்டியா ஒரு எலக்ரிக் கிடார் பிட் ஒண்ணு வரும். அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. இவ்வளவு சின்ன விசயத்தை ராஜா எவ்வளவு கலக்கலாக கொடுத்திருக்கிறார். கவனித்துப் பாருங்கள் ( 'வா வா பக்கம் வா' என்று முடிந்தவுடன்...'பக்கம் வர வெக்கமா' முடிந்தவுடன்). பாடலே ஒரு டிஸ்கோ பாட்டு. ஆனால் அதிலும் ஒரு மெலோடி பாடல் முழுவதும் நம்மை ஆட்டத்தோடு தாலாட்டவும் செய்யும். கேட்டுப் பாருங்க.





இரண்டாவதாக, ஒரு அரிய பாடல். 'கடல் மீன்கள்' படத்தில் இருந்து 'என்றென்றும் ஆனந்தமே'. இதை நான் ஏன் அரிய பாடல் என்று சொல்கிறேன் என்றால், 'கடல் மீன்கள்' படத்தில் 'தாலாட்டுதே வானம்' அளவுக்கு இந்த பாடல் மக்களை தொடவில்லை. கமல் படமாக இருந்தும், கமல் பாட்டாக இல்லாதது காரணமாக இருந்திருக்கலாம் (படத்தில் சுமன் மேடையில் ஆடிப்பாட, அம்பிகா கூட சேர்ந்து ஆடுவார்). மலேசியா வாசுதேவனின் டாப் 10-ல் இந்த பாடலை தாராளமாக வைக்கலாம். அவ்வளவு அருமையாக பாடி இருப்பார்.

இந்த பாடல் ஒரு தனி வயலின் ஆவர்த்தனம். இப்படி ஒரு டான்ஸ் பாட்டில் தனி வயலின் சேர்ப்பதே ஆச்சர்யம் தான். அதை கிட்டத்தட்ட ஒரு இணை குரல் அளவுக்கு இந்த பாடலில் பயன் படுத்தி இருப்பார். தனி வயலினுக்காக ரொம்ப ரசிக்கும் பாடல் இந்த பாடல் தான். அதுவும் சரணத்தில் ஆண் குரலோடு பின்னி பிணைந்து வயலினை விட்டிருப்பார். அதைக் கேட்டால், ஒரு பெண் அப்படியே ஆண் குரலோடு பின்னி பிணைந்து ஆடுவது போலவே கலக்கலாக இருக்கும் (மஞ்சள் நிற பூவெடுத்து...மங்கை உடல் சீர் கொடுத்து..கொஞ்சி வரும் பாட்டெடுத்து..வந்த சுகமே- பாடும் போது). கேட்டுப் பாருங்கள்.






இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Wednesday, February 01, 2006

உச்சி வகுந்தெடுத்து ( S.P.B தனி ஆவர்த்தனம் - 3)

நண்பர்களே! S.P.B தனி ஆவர்த்தனம் மூன்றாவது பதிவை ஆரம்பிக்கிறேன். போன பதிவில் ராஜாவின் இசையில் S.P.B பாடிய சில பழைய பாடல்களை பார்த்தோம். இன்று அதே காலகட்டத்தில் ( 70S இறுதியில்) வந்த மற்ற இசை அமைப்பாளர்களின் சில அழியா வரம் பெற்ற பாடல்களை கேட்கலாம்.

இந்த பாடல்களை கேட்கும் போது எனக்கு இரண்டு விஷயங்கள் பிரமிப்பை உண்டு பண்ணும். ஒன்று, இவ்வளவு எளிமையான இசையிலும் எத்தனை தடவை கேட்டாலும் அலுப்பே தட்டாத கம்போசிங். இரண்டாவது எஸ்.பி.பி. மனுசன் ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும் பாடும் போது கொடுக்கும் உணர்வு என்ன, அழகு என்ன!. வெறுமனே எஸ்.பி.பி எப்படி பாடுகிறார் அப்படின்னு மட்டும் கவனித்து ஒவ்வொரு பாட்டையும் கேளுங்கள். இப்படி ஒரு பாடகர் கிடைக்க நாமெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இப்போ பாட்டுக்கு போகலாம். நமக்கு பழைய பாட்டு எல்லாம் கேட்பதோடு சரி, இசை அமைப்பாளர், இசை பற்றி சுத்தமாக அறிவு கிடையாது. எனவே நேரே பாட்டு தான். அடிக்கடி கேட்டு பாருங்க. மிஸ் பண்ணிடாதீங்க :-).

1. முதலில் ராஜா இசையிலேயே தொடங்குகிறேன். 'உச்சி வகுந்தெடுத்து.. பிச்சிப்பூ வச்ச கிளி'. 'ரோசாப்பூ ரவிக்கைக் காரி' படத்தில் இருந்து.





2. 'எதிர்ப் பார்த்தேன்..இளங்கிளியே காணலியே
இளங்காத்தே...ஏன் வரல தெரியலையே...
வா..ரா..ளோ என் மாது..பூங்காற்றே போ தூது"
- அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை





3. 'அவள் ஒரு மேனகை..என் அபிமான தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை..
காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்..'
- நட்சத்திரம்





4. ' வாடாத ரோசாப்பூ..நா ஒன்னு பார்த்தேன்..
பாடாத சோகத்தோட..பாட்டும் பாட கேட்டேன்'
- கிராமத்து அத்தியாயம்





5. 'பொன்னை நான் பாத்ததில்லை..பெண்ணை தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை...பூவையை கண்டதுண்டு..
இந்த பூமியின் இன்ப தேவதை..அன்பு ராகம் நீயே தான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்..காதல் தீபம் நீயே தான்'
- கண்ணாம்பூச்சி