கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, January 15, 2006

மனோ பாட்டு

மனோ. ராஜாவால் உருவாக்கி வளர்த்து விடப்பட்ட பாடகர். இவர் மற்ற பாடகர்களுக்கு ட்ராக் பாடிக்கொடுத்துக் கொண்டிருந்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ட்ராக் பாடுவது என்றால் ஒரு இசை அமைப்பாளர் ஒரு பாடலுக்கு வடிவம் கொடுக்கும் போது, அந்த பாடலை ஒரு சிறிய பாடகர் பாடி அதை அந்த பாடல் பாடவிருக்கும் பாடகருக்கு அனுப்புவார்கள். பாடகர் அந்த பாடலை கேட்டு, ரெக்கார்டிங் வரும்போது தயாராக வருவார். அப்படி ஒரு சிறிய பாடகராக ராஜாவிடம் இருந்த மனோவை 'அண்ணே அண்ணே..நீ என்ன சொன்னே' என்று பூவிலி வாசலிலே-வில் பாடவைத்தது ராஜா தான். அந்த பாடல் வெளியாகும் போது பாடகர் பெயர் 'நாகூர் பாபு" (மனோவின் நிஜ பெயர்). படத்தில் பார்த்தால் 'பிண்ணனி பாடகர்கள்' பட்டியலில் அப்படித் தான் வரும். (இப்போது என்னிடம் இருக்கும் குறுந்தட்டில் 'மனோ' என்று இருக்கிறது). அப்போது எஸ்.பி.பி-ஜானகி என்று இந்த ஜோடி கலக்கிக் கொண்டிருந்தது. சித்ராவிற்க்கு ஜோடிப்பாடகர் ஒன்று கொண்டு வந்து அதை எஸ்.பி.பி-ஜானகி போலவே கொண்டுவர ராஜா ஆசைப்பட்டார். மனோச்சித்ரா என்பது நன்றாக இருக்கும் என்று 'நாகூர் பாபு' என்பதை மனோ என்று மாற்றியது ராஜா தான்.

ராஜாவின் பாடல்கள் அனைத்துமே அருமை. அதில் மனோ மட்டும் விதிவிலக்கா என்ன?. எல்லா பாடல்களிலும் கொடுத்த வேலையை அலட்டாமல் தகுந்த உச்சரிப்புடன் ரொம்ப அழகாக பாடியிருப்பார் மனோ. அதை தவிர்த்து சில வித்தியாசமான பாடல்களை பாடிய பெருமையும் மனோவுக்கு உண்டு. அவற்றில் சில 'வேதாளம் வந்து நிக்குது' (சூரசம்ஹாரம்) "ஆயிரத்தில் நான் ஒருவன்" (இருவர்) "ஏய்! ஷப்பா..ஏய் ஷப்பா' (கர்ணா) போன்று சில பாடல்களில் வித்தியாசம் காட்டியிருப்பார்.

யோசித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட 20 க்கும் மேலாக பாடல்கள் சேர்ந்து விட்டது. ஒரே பதிவில் அத்தனையையும் போட முடியுமா?. அதனால் இந்த பதிவில் ஒரு ஐந்து பாடல்களை கொடுக்கிறேன்.

முதல் பாடல். மனோ தனித்து பாடிய பாடல். இந்த வகையில் ஏற்க்கனவே சில பாடல்கள் கொடுத்திருக்கிறேன். இன்று 'புதிய ராகம்' படத்தில் இருந்து 'ஓ! ஜனனி..என் ஸ்வரம் நீ'. தொடக்கம் முதல் முடியும் வரை ஒரே சீரான தாளம். நம்மையறியாமல் நம்மையும் பாட வைக்கும் ஒரு பாடல். பாடல் இங்கே.





போன பாட்டு போட்டி போட்டதில் இருந்து உஷா இந்த பாடலை முழுவதும் போடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் இந்த பாடலுக்கு நேரம் வந்திருக்கிறது. 'தங்கமனசுக்காரன்' படத்தில் இருந்து மனோ-ஜானகி ஜோடியில் 'பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு'. கிராமத்து இசையில் தொடங்கும் பல்லவி, சரணத்தில் ராஜாவின் விருப்ப தபேலாவிற்க்கு மாறுகிறது. பாடலில் சரணம் ரொம்பவே அழகாக இருக்கும். 'இந்த உடலுக்குள் வந்த உயிருக்குள் வந்து புகுந்தவளே' என்று மனோ ஆரம்பிக்கும் இடம் ரொம்பவே அழகு. பாட்டு கீழே





இப்போ மனோ-சித்ரா. ஒரு துள்ளல் பாட்டு. 'இரட்டை ரோஜா'வில் இருந்து 'சிறுவாணி ஆத்து தண்ணி'. குஷ்பு பாட்டு. கேயார் படங்களுக்கு ராஜாவின் இசை என்றுமே ஸ்பெசல் தான். வெறும் கதை மட்டும் ஒரு இசையமைப்பாளரிடம் இருந்து நல்ல இசை வாங்க போதாது, ஆட்களை பொருத்து என்பதை கேயார் படங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஆட்களை பொருத்தது என்று நான் சொல்வது, ஜால்ரா கோஸ்டி என்று அர்த்தம் அல்ல. ராஜாவிடம் உட்கார்ந்து நல்ல பாட்டு வாங்குவதற்க்கும் கொஞ்சம் ஞானம் வேண்டும். அதில் கமலுக்கு ஒரு தனி இடம் உண்டு. சமகாலத்தில் வெளியான 'விருமாண்டி'யையும் 'கொஞ்சி பேசலாமா' வையும் கேட்டாலே வித்தியாசம் புரியும். சரி இப்போ பாட்டு.





இப்போ மனோ-சுசிலா. இந்த ஜோடியில் ரெண்டு மூனு பாட்டு நல்ல பாட்டு இருக்கு. இந்த பாடலும் கிட்டத்தட்ட 'பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு' பாட்டு மாதிரி தான். கிராமத்து இசை. சரணத்தில் அப்படியே ராஜாவின் வழக்கமான தபேலாவிற்க்கு மாறும். பாட்ட கேட்டு ரசிக்க..





இறுதியாக, மனோ-சுவர்ணலதா ஜோடி பாடல் ஒன்று. 'மலைக்கோவில் வாசலிலே' (வீரா) போடலாமான்னு நெனைச்சேன். அது அடிக்கடி கேட்கிற பாடல் தானே. என் விருப்பமாகவும் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சோக பாட்டொன்னும் போடலாம் என்று இதை போடுகிறேன். "கண்மணி காதல் வாழ வேண்டும்' ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் இருந்து. சுமாராக போன படம். ராஜா பாக்கியராஜ்க்கு கடைசியாக இசை அமைத்த படம். அதற்கு அப்புறம் பாக்கியராஜ் ராஜாவிடம் கா சொல்லிட்டு மூன்று டப்பா படம் எடுத்து (வேட்டிய வரிஞ்சி கட்டு, ஞான பழம், அம்மா வந்தாச்சி) அத்தோடு ரிட்டையர்ட் ஆகிட்டார். இந்த மூனு படமும் ஊத்தியதில் ஒரு அல்ப சந்தோசம் எனக்கு (தப்பா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வராதீங்க :-). இந்த பாடலை எதிர்பார்த்து போன எனக்கு பெரிய ஏமாற்றம். இந்த பாட்டு படத்தில் க்ளைமாக்ஸ்சில் விட்டு விட்டு வரும். காட்சிக்கும் கதைக்கும் ஏற்ற அருமையான பாட்டு. அருமையான தபேலா. கேட்டு சொல்லுங்க.






இன்னும் நிறைய பாட்டு இருக்கிறது. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

13 Comments:

At 12:18 AM, Blogger ஜெ. ராம்கி said...

Mano Songs.... my top 5 :-)

5. Ninaithathu Yarro - ?????

4. Vaa Vaa Vanchi ilamaane - Guru Sishyan

3. Meenamma Meenamma - RajathiRaja

2. Velai illathavan thaan - Velaikaaran

1. Malayala Karaiyorm - RajathiRaja

 
At 4:32 AM, Blogger சிவா said...

வாங்க ராம்கி! ரஜினி பாட்டா பட்டியல் போட்டுட்டீங்க :-). அந்த ஐந்தாவது பாட்டு 'நினைத்தது யாரோ' பாட்டுக்கொரு தலைவன் படத்தில் இருந்து. இது விஜயகாந்த் படம். 'வா வா வஞ்சி இளம்மானே' பாடியது எஸ்.பி.பி என்று நினைக்கிறேன். கேட்டால் அப்படிதான் இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்க.

உஷா! நன்றி

 
At 11:14 AM, Blogger குமரன் (Kumaran) said...

பாட்டெல்லாம் கேட்டேன் சிவா. வழக்கம் போல இருக்கு. :-)

 
At 10:18 PM, Blogger முத்துகுமரன் said...

சிவா
மனோவோட அட்டகாசமான பாட்டை விட்டுடேங்களே

அதாங்க - தேன்மொழி எந்தன் தேன்மொழி ( சொல்லத் துடிக்குது மனசு)

மத்தபடி எல்லாமே நல்ல பாட்டுதான்

 
At 7:08 PM, Blogger சிவா said...

குமரன்! வழக்கம் போல சொல்லிட்டீங்க :-)) நன்றி.

ஆமாம் முத்துக்குமரன்! அந்த பாட்ட எப்படியோ விட்டுட்டேன். மனோ-2 ல கண்டிப்பா போட்டுடறேன்.

 
At 8:16 PM, Blogger ஜெ. ராம்கி said...

// 'வா வா வஞ்சி இளம்மானே' பாடியது எஸ்.பி.பி என்று நினைக்கிறேன். கேட்டால் அப்படிதான் இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்க.

No Siva. You r not correct. This is my most favourite song from "Guru Sishyan"

 
At 6:11 AM, Blogger சிவா said...

ராம்கி! இதை கேட்டு பாருங்கள்.

http://www.geocities.com/iirpithan/Geetham/VaaVaaVanchi.rm

இது எஸ்.பி.பி தானே :-). (நல்ல நிறைய தடவை கேட்டு பாருங்க. கொஞ்சம் குழப்பத்தான் செய்கிறது) இதே பாடல் மனோ பாடி இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்க. எனக்கு தெரிந்து குருசிஷ்யனில் 'ஜிங்கிடி ஜிங்கிடி' பாட்டு தான் மனோ. நீங்க 'வா வா மஞ்சள் மலரே' சொல்றீங்களோ?

இன்னும் குழப்பமா இருந்தா, பஞ்சாயத்த கூட்டிடலாம். என்ன சொல்றீய பாஸ் :-)

 
At 6:11 AM, Blogger சிவா said...

லிங்க் சரியா வரலை போல

http://www.geocities.com/
iirpithan/Geetham/
VaaVaaVanchi.rm

 
At 9:50 AM, Blogger முத்துகுமரன் said...

//'வா வா வஞ்சி இளம்மானே' //

சிவா அது மனோதான். நம்ப கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்

சில பாடல்களுக்கு இந்த மாதிரியான குழப்பம் உண்டு. குறிப்பாக 1988 -89 வந்த படங்களுக்கு

 
At 4:43 AM, Blogger சிவா said...

ராம்கி & முத்துகுமரன்! ஒரு வேளை நீங்க சொன்னது உன்மையாக இருக்கும் போல :-). சில நேரங்களில் கொஞ்சம் குழப்பம் வரத்தான் செய்கிறது.

ராம்கி! நீங்க சொன்னது சரி தான் பாஸ். நான் தான் கொஞ்சம் குழம்பிட்டேன் :-))

 
At 8:10 PM, Blogger சிவா said...

சரவணன், முதல் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க. பாட்ட கேட்டு ரசிங்க.

 
At 8:06 AM, Blogger Sundar Padmanaban said...

சிவா..

எனக்கு மிகவும் பிடித்த மனோ பாடல்களில் சில:

1. மெளனம் ஏன் மெளனம் ஏன் வசந்த காலமா? (என் ஜீவன் பாடுது)
2. செண்பகமே செண்பகமே, மதுரை மரிக்கொழுந்து வாசம்
3. இதயத்தைத் திருடாதே - அனைத்துப் பாடல்களும் (அது சரி. தெலுங்கு கீதாஞ்சலியில் தலைவர் பாலுவின் பாட்டைக் கேட்டீர்களென்றால் இ.திருடாத்யில் மனோவைக் கேட்பது கொஞ்சம் கஷ்டம்தான்)
4. அதோ மேக ஊர்வலம்
5. பட்டுப் பூவே மெட்டுப் பாடு (செம்பருத்தி)
6. நிலாக் காயும் நேரம் சரணம்
7. புத்தம் புது பூமி வேண்டும்
8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
9. நிக்கட்டுமா போகட்டுமா நீலக் கருங்குயிலே
10.என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா?
11. நாடோடித் தென்றல் (அனைத்துப் பாடல்களும்) (ஹூம்.. அநியாயமாக வீணாய்ப் போன ராஜாவின் உழைப்பில் இதுவும் ஒரு படம்)
12.காதோரம் லோலாக்கு
13. முக்காலா முக்காபுலா (பொதுவாக நான் மெலடி ரசிகன். இப்பாடல் விதிவிலக்கு :))
14. ஆசையில பாத்தி காட்டி நாத்து ஒண்ணு
15. தில்லானா தில்லானா (முத்து)
16. தேன் மொழி.. எந்தன் தேன் மொழி
17. ராசாத்தி மனசிலே இந்த ராஜா
18. குடகு மலைக் காற்றில் வரும் பாட்டு கேட்குதா?
19. நல்லதோர் வீணை செய்தே (படம் : பாரதி)

இன்னும் சில பிடித்த பாடல்கள் இருக்கின்றன. சட்டென நினைவுக்கு வரவில்லை.

உங்கள் பதிவு ஒரு இனிய பதிவு.. தொடருங்கள் சிவா... வலிக்கு இதம் தருவது இசை. இப்போதைய நிலையில் நிறையவே இதம் தேவையிருக்கிறது.

நன்றி.

 
At 1:26 AM, Anonymous Anonymous said...

/ 'வா வா வஞ்சி இளம்மானே' பாடியது எஸ்.பி.பி. - எப்படி இருந்தாலும் எஸ்.பி.பி. யின் குரல் தனித்து விளங்கும் .அது ஒரு மயக்கும் குரல்

 

Post a Comment

<< Home