கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, March 19, 2006

அழகாக சிரித்தது அந்த நிலவு (ஜெயசந்திரன்)

ஒரு வாரத்திற்கு அப்புறம் மீண்டும் இந்த வார பதிவில் சந்திக்கிறோம். நான் தமிழ்மணத்தில் கவனித்துப் பார்த்ததில் ஒரு பாடகருக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. என்னைய மாதிரி, சுந்தர் மாதிரி, நிலா மாதிரி எஸ்.பி.பி என்று சொல்லாம 'என்னவே பாட்டு கேக்குறீர்! ஜெயசந்திரன் பாட்டு கேட்டுப் பாரும்வே. அது பாட்டு. நீரும் பாட்டு போடறீறே' அப்படின்னு அடிக்கடி நம்ம ராகவன் என்னை வம்புக்கு இழுக்கிறார். இவர் கூட ராமசந்திரன் உஷா, மரவண்டு கணேஷ் என்று ஜெயசந்திரன் அணிக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சரி! இவங்களையும் புடிச்சி கீதம்ல போடணும்னா அவங்க புடிச்ச பாட்டு போடணும்ல. அதுக்குத் தான் இந்த பதிவு. ஜெயசந்திரன் சிறப்புப் பதிவு.

"ஒங்க ராஜா (ஹி! ஹி!) வந்தப்புறம் தான் ஜெயசந்திரனுக்கு அவ்வளவா பாட்டு இல்லை. அவரு கொடுத்த (ஒரு 70 பாட்டு இருக்கும்) அத்தனையும் முத்துக்கள். ஆனா ராஜா வருவதற்கு முன்னாடி வரைக்கும் ஜெயசந்திரன் நெறைய பாடி இருக்கிறார்" - இப்படி நம்ம ராகவன் என்னிய வம்புக்கு இழுக்கிறார். அந்த சண்டைய நாங்க தனி மடலில் வச்சிக்கிட்டோம். இங்கே கீதத்தில் குடுமி புடி சண்டை எல்லாம் வேணாங்க :-). எப்படியோ அவரே ராஜா இசையில் ஜெயசந்திரன் பாடிய பாடல்கள் அனைத்தும் முத்துக்கள் என்று சொல்லிட்டார். அந்த முத்துக்களில் சில முத்துக்கள் இந்த பதிவில் கேட்கலாம். தேர்வு பண்ணி போடலாம்னா அத்தனையும் போடணும் போல. அது வேலைக்கு ஆகாதுன்னு, எனக்கு டக்குன்னு தோன்றிய ஒரு 5 பாடல்களை இந்த பதிவில் கொடுக்கிறேன்.

ஜெயசந்திரனை பற்றி சொல்லனும்னா, ஒரே நேர் கோட்டில் பாடும் (அங்கன இங்கன ஏத்தம் எறக்கம் இல்லாம) சில பாடகர்களில் ஒருவர். அதனால் இவர் பாடல் பொதுவாக மெலோடி பாடல்களாக இருக்கும். அதனால் மெலோடி பிரியர்களுக்கு ஜெயசந்திரன் பாடல்கள் அனைத்தும் சர்க்கரைப் பொங்கல் தான். இப்போ பாடலுக்கு போகலாம்.

முதலில் ஜிவ்வுன்னு ஒரு பாட்டு. இளையராஜா இசையில் 'டிசம்பர் பூக்கள்' படத்தில் இருந்து 'அழகாக சிரித்தது அந்த நிலவு'. ஜெயசந்திரன் பாடல்களில் இதை கொஞ்சம் வேகமான பாடல் என்று சொல்லலாம். ஜானகியின் கொஞ்சல்ஸ் அருமை. நல்ல ஒரு ட்ரம்ஸ்-ல் போகும் பாடல். இங்கே.








ராஜா ஜெயசந்திரனை நிறைய விஜயகாந்த் படங்களுக்கு தான் பயன் படுத்தி இருக்கிறார். வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோவில் கிழக்காலே,என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் இன்னும் சில. அந்த காலகட்ட நடிகர்களில் ஜெயசந்திரன் குரல் நன்றாக ஒத்துப்போன ஒரு நடிகர் விஜயகாந்த் தான். இந்த பாடல் எனக்கு ரொம்ப நாளா புடிக்காத பட்டியலில் இருந்து வந்தது. காரணம், இந்த பாடல் வெளிவந்து பட்டைய கெளப்பிக்கிட்டு இருந்த காலத்தில் நான் ரொம்ப சின்னப் பையன். இவ்வளவு உருக்கமா பாடினா அப்போ புடிக்குமா. அப்படியே கெடப்புல போட்டுட்டேன். கல்லூரி சேர்ந்தபின்பு தான் மறுபடி கேட்டுப் பார்த்தேன். அன்னைக்கு கேட்ட மாதிரியே இன்னிக்கும் அதே மாதிரி மெய் மறந்து கேட்டுக்கிட்டு இருக்கிறேன். 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் இருந்து 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி'. ஐயோ..என்னா பாட்டுங்க இது. 'நீரு நெலம் நாலு பக்கம் நான் திரும்பி பார்த்தாலும்' அப்படிங்கிற ரெண்டாவது சரணம் என்னோட Favorite. இப்போ பாடல்.






இந்த பாடலை பார்க்கும் போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றும். எப்படி பாண்டியராஜனுக்கு ஜெயசந்திரனை தேர்வு செய்தார்கள். அதுவும் இப்படி ஒரு பாடல் பாண்டியராஜனுக்கு எப்படி. ஹாஹாஹா. நான் சொல்ற பாட்டு இது தாங்க. 'உள்ளம் கவர்ந்த கள்வன்' படத்தில் இருந்து 'எம் மனச பறி கொடுத்து, உம் மனசில் எடம் புடிச்சேன்'. பாண்டியராஜன்-ரேகா நடிப்பில் வெளி வந்த படம். பாணடியராஜனின் வழக்கமான காமெடி இல்லாமல் ரொம்ப சீரியஸ்-ஆன ஒரு காதல் படம் இது. நான் சின்ன புள்ளையில தியேட்டர்ல போய் பார்த்து முழிச்சிக்கிட்டு இருந்த ஒரு படம் :-). ஜெயசந்திரனுக்கு அல்வா மாதிரி ஒரு பாடல் இது. கேட்டுப் பாருங்க.







ரெயில்ல எல்லோரும் போயிருப்பீங்க. அந்த தடக் தடக் சத்தமும், அந்த விசில் சந்தமும் ஒரு அழகான மெட்டு கொடுக்கும். விசில்னா அந்த பழைய கரி எஞ்சின் தாங்க நச்சின்னு இருக்கும். இப்படி ஒரு மெட்டு எடுத்துக்கொடுக்கும் போது, அந்த சத்தத்தை வைத்து ராஜா ஒரு முழுப்பாடலை அழகாக கொடுத்திருப்பார். அது 'பாட்டுக்கு நான் அடிமை' படத்தில் இருந்து மனோ பாடிய 'தாலாட்டு கேட்காத' (ஏற்கனவே பதிவில் போட்டாச்சு). இந்த பாடலின் பல்லவியும் அது போல தான். 'முதல் இரவு' படத்தில் இருந்து 'மஞ்சள் நிலாவுக்கு இன்று' பாடல். நம்மை அறியாமல் முனுமுனுக்க வைக்கும் பாடல் இது. ஜோடி குரல் சுசிலா.





இறுதியாக மறுபடியும் விஜயகாந்த் படத்தில் இருந்து தான். விஜயகாந்த் படங்களில் இந்த படத்திற்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு. வெறும் பாட்டுக்காவும், சண்டைக்காகவும் பட்டித்தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய ஒரு படம். நல்ல பாடலும், சண்டையும் இருந்தா தெளிவான ஒரு திரைக்கதையால் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம் என்று சொல்லிச் சென்ற படம்.(அப்போல்லாம் ஊருல 'சண்டை காட்சிகள் நிறைந்த' அப்படின்னு தான் போடுவாங்க. லே! 6 சண்டை இருக்குல என்று தான் படத்துக்கு மதிப்பெண் போடுவோம். சண்டையே இல்லாத படத்துக்கு தெரியாம போய் சிண்டை புடிச்சிக்கிட்டு ஒக்காந்துட்டு எவனாவது 'நல்ல கதை' அப்படின்னு சொன்னான் என்றால் நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு வருவோம். அது ஒரு காலம்). இதில் 'பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே' பாடலை தான் இங்கே கொடுக்கிறேன். நம்ம கேப்டன் ஆர்மோனிய பொட்டில கைய வச்சி, மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு உருக்கமா சங்கீத ஞானத்தோட பாடுற மாதிரி பாடி கிச்சி கிச்சி மூட்டினாலும், நான் படத்திலும் ரொம்பவே ரசிக்கும் ஒரு பாடல். சேர்ந்து பாடுவது ஜானகி.







( மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் )

27 Comments:

At 9:18 PM, Blogger G.Ragavan said...

// வார பதிவில் சந்திக்கிறோம். நான் தமிழ்மணத்தில் கவனித்துப் பார்த்ததில் ஒரு பாடகருக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. என்னைய மாதிரி, சுந்தர் மாதிரி, நிலா மாதிரி எஸ்.பி.பி என்று சொல்லாம 'என்னவே பாட்டு கேக்குறீர்! ஜெயசந்திரன் பாட்டு கேட்டுப் பாரும்வே. அது பாட்டு. நீரும் பாட்டு போடறீறே' அப்படின்னு அடிக்கடி நம்ம ராகவன் என்னை வம்புக்கு இழுக்கிறார். இவர் கூட ராமசந்திரன் உஷா, மரவண்டு கணேஷ் என்று ஜெயசந்திரன் அணிக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. //

பின்னே.....ஜெயச்சந்திரன்னா சும்மாவா! :-)

// "ஒங்க ராஜா (ஹி! ஹி!) வந்தப்புறம் தான் ஜெயசந்திரனுக்கு அவ்வளவா பாட்டு இல்லை. அவரு கொடுத்த (ஒரு 70 பாட்டு இருக்கும்) அத்தனையும் முத்துக்கள். ஆனா ராஜா வருவதற்கு முன்னாடி வரைக்கும் ஜெயசந்திரன் நெறைய பாடி இருக்கிறார்" - இப்படி நம்ம ராகவன் என்னிய வம்புக்கு இழுக்கிறார். அந்த சண்டைய நாங்க தனி மடலில் வச்சிக்கிட்டோம். இங்கே கீதத்தில் குடுமி புடி சண்டை எல்லாம் வேணாங்க :-). //

புலவர்களுக்குள் சண்டையும் சர்ச்சையும் உண்டாவதுதானே ஹா ஹா ஹா...நம்ம சண்டையெல்லாம் நம்மளோடதான...இப்ப இருக்கும். அப்புறம் காணாமப் போயிரும்... :-)

// எப்படியோ அவரே ராஜா இசையில் ஜெயசந்திரன் பாடிய பாடல்கள் அனைத்தும் முத்துக்கள் என்று சொல்லிட்டார். //

உண்மைதாங்க. இளையராஜா இசையில ஜெயச்சந்திரன் பாடி சோடை போனதா ஒரு பாட்டு கூட இல்லைன்னு அடிச்சுச் சொல்லலாமே. அதே போலத்தான் வாணி ஜெயராமுக்கும். அது எப்படீன்னே புரியலை.

இன்னொரு விஷயம்...சிவாஜிக்காக ஜெயச்சந்திரன் பாடிய ஒரே பாட்டும் இளையராஜா இசையிலதான்.

நீங்க சொன்ன அத்தன பாட்டுலயும்...மஞ்சள் நிலாவுக்கு பாட்டு சூப்பரோ சூப்பர். கூகூஊஊஊஊஊஊஊ அந்தப் பாட்டு முழுக்கவே இப்ப மண்டைக்குள்ள ஓடுது...கூஊஊஊஊஊஊஊஊஊ

 
At 2:29 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆஹா! இது பாட்டுப்பதிவு!! :)

-மதி

பி.கு: இதைவிடவும் மிக அருமையான பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருக்காரென்றாலும் பாடல்களைப் போட்ட பாவத்துக்காக உங்களைச் சும்மா விடுறேன் சிவா. :)

'மரவண்டு' கணேஷ் அருமையான ஒரு இடுகை எழுதியிருக்கார் ஜெயச்சந்திரன் பற்றி...

 
At 3:38 AM, Blogger சிவா said...

வாங்க ராகவன்! ஆகா என்னையும் உங்க புலவர் கூட்டத்துல சேர்த்துட்டீங்களா..ஹாஹாஹா :-))

//** இளையராஜா இசையில ஜெயச்சந்திரன் பாடி சோடை போனதா ஒரு பாட்டு கூட இல்லைன்னு அடிச்சுச் சொல்லலாமே. **// இல்லியா பின்னே :-)

//** சிவாஜிக்காக ஜெயச்சந்திரன் பாடிய ஒரே பாட்டும் இளையராஜா இசையிலதான் **// ஆஹா! ஆரம்பிச்சிட்டாருய்யா..என்ன சோதிக்க :-)). யாரவது காப்பாத்துங்க.

//** மஞ்சள் நிலாவுக்கு பாட்டு சூப்பரோ சூப்பர். கூகூஊஊஊஊஊஊஊ **// ஆமாம் ராகவன்..அந்த கூகூஊஊஊஊ -ம் அதை தொடர்ந்து வரும் விசில் சத்தமும் நம் மனதை கொள்ளை கொள்ளும் :-).

அப்புறம் உங்களுக்காக இன்னொரு பதிவு நம்ம புராணம் ப்ளாக்ல போட்டிருக்கிறேன். போய் பாரும் ஓய் :-))

 
At 3:41 AM, Blogger சிவா said...

//**ஆஹா! இது பாட்டுப்பதிவு!! :)**// மதி! நன்றி நன்றி :-))

இன்னும் போட்டிருக்கலாம்னு நெனைச்ச பாட்டு 'ராஜா மகள்' (பிள்ளை நிலா) 'மயங்கினேன்' (நானே ராஜா நானே மந்திரி) இன்னும் சில. உங்கள் மிக சிறந்த பட்டியலையும் அப்படியே சொல்லிட்டு போங்க. நானும் தெரிஞ்சிக்கறேன். :-)

நீங்க சொன்ன மரவண்டு கணேஷோட பதிவை நானும் படித்திருக்கிறேன் மதி. அப்புறம் அவரு எனக்கு அவர் வைத்திருந்த நிறைய ஜெயசந்திரன் பாடல்களை கொடுத்தார். மவராசன் :-). அதை தொடுப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். விட்டுப்போய் விட்டது.

 
At 5:56 AM, Anonymous Anonymous said...

மஞ்சள் நிலாவுக்கு சுப்பர் பாட்டு சிவா.. ஆனாலும் எனக்கு ஜெயச்சந்திரன் பாடினதுல பிடிச்ச பாட்டு "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு .."

இந்த பாட்டுதான்

அன்புடன்
கீதா

 
At 6:54 AM, Blogger Maravandu - Ganesh said...

அன்புள்ள சிவா

பாடல்களை என்னால் கேட்கமுடியவில்லை.
இருந்தாலும் பதிவுக்கு நன்றி

//இந்த பாடலை பார்க்கும் போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றும். எப்படி பாண்டியராஜனுக்கு ஜெயசந்திரனை தேர்வு செய்தார்கள்//

பாண்டியராஜன் நடித்த ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் என்ற திரைப்படத்தில் ஜெயச்சந்திரன் ஒரு பாடல் பாடியிருக்கிறார் ... " தாலாட்டுதே கண்மணி பொன்மணி "


உஷா சொன்ன நெஞ்சில் உள்ள காயம் ஒன்று அந்தப் பாடல் என்னிடம் இருக்கிறது .

பி.கு

எனது ஜெயச்சந்திரன் பதிவில் மேலும் சில பாடல்களைச் சேர்க்க வேண்டும்..

என்றும் அன்பகலா
மரவண்டு

 
At 6:58 AM, Blogger Maravandu - Ganesh said...

//ஆனாலும் எனக்கு ஜெயச்சந்திரன் பாடினதுல பிடிச்ச பாட்டு "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு .."இந்த பாட்டுதான்//

Dear Geetha

This song was sung by Deepan Sakkaravarththi , not by Jayachandran

Thanks
maravantu

 
At 7:30 AM, Blogger தங்ஸ் said...

super collection! Athu sari, yara kettu mudivu edutheenga? ini vaaram oru pathivunnu...

Geetha,
Sevvanthi pookkalil - deepan sakravarthy illaya?

 
At 9:18 AM, Blogger G.Ragavan said...

// Dear Siva,
Sivaji kaga Jayachandran padina song

Film : Rishimoolam

song : Nenjill ulla kayam onru
nenjai vittu senradhu!!

Ragavan correca? //

உஷா சங்கர், ரொம்ப சரியாச் சொன்னீங்க....ரொம்ப நல்லாயிருக்கும் இந்தப் பாட்டு.

சிவா, அதே போல...இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் ஜதி மட்டும் பாடிய மிகப்பிரபலமான பாடல் தெரியுமா? (உஷா நீங்க சொல்லீருவீங்கன்னு நெனைக்கிறேன்)

 
At 12:32 PM, Anonymous Anonymous said...

ஓ அந்த பாடல் தீபன் சக்ரவர்த்தி பாடியதா?? இது நாள் வரையில் ஜெயசந்திரன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. அப்படித்தான் பதிவு செய்து வச்சிருக்கேன். எனக்கு இவர்கள் குரல் அவ்வளவு பரிச்சயம் இல்லை.. மன்னிக்கவும்.

அன்புடன்
கீதா

 
At 6:44 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! ராகவனிடம் இருந்து என்னிய காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி :-). அவரு பாக்குறதுக்கு தான் சின்ன பையன் மாதிரி இருக்காரு..கேள்வி கேட்டா ஒரே 70S 80S வாடை..நம்ம அறிவுக்கு ஏத்த மாதிரி கேள்வி கேட்க மாட்டேங்கிறார் :-))

 
At 6:46 PM, Blogger சிவா said...

கீதா! இப்படி குழப்பம் தீபனுக்கும் ஜெயசந்திரனுக்கும் நிறைய வரும். 'அரும்பாகி மொட்டாகி' பாடலை நான் கூட ரொம்ப நாள் ஜெயசந்திரன் என்று நினைத்திருந்தேன்..அப்புறம் தான் தெரிஞ்சது அது தீபன் என்று தெரிந்தது. இதெல்லாம் சகஜம் தான் :-)). எப்படியோ நாம மனோ பாடலை உன்னி கிருஷ்ணன் பாடினதுன்னு சொல்லாம இருந்தா சரி. :-))

 
At 6:58 PM, Blogger சிவா said...

வாங்க கணேஷ்! சென்னைல செட்டில் ஆகிட்டீங்களா..உங்க ப்ளாக் பக்கம் கொஞ்ச நாளா வந்து பார்த்தேன். ஒன்னும் வரலை. இன்னிக்கு பார்த்தேன். ஆடு கதை ஒன்று பார்த்தேன். என் புராணம் ப்ளாக்ல 'கருப்பன்' கதை பாத்தீங்களா?

ஜெயசந்திரன் பாட்டெல்லாம் கொடுத்ததுக்கு நான் தான் நன்றி சொல்லணும் கணேஷ். அப்புறம் பாட்டு ப்ளாக் பற்றி கேட்டீங்க. பதில் போட்டேன். உங்க கிட்ட இருந்து பதிலே இல்ல :-(

'ஊரை தெரிஞ்சிகிட்டேன்' படம் நல்லா நியாபகம் இருக்கு. பாட்டு ஒன்னும் நியாபகம் வரலை. யாரு இசை அமைப்பாளர். சங்கர்-கணேஷ் ஆ?

அந்த பாட்டு (ராகவன் சொன்ன பாட்டு) இருந்தா கொடுங்க. உங்க gmail-la ஏத்தி இருந்தா நான் பார்க்கறேன். இன்னும் பாட்டு போடறீங்களா..போடுங்க..கேக்கறேன்.

பாடலை கேட்க உங்க கணிணில ரியல் ப்ளேயர் இருக்கான்னு பாருங்க கணேஷ்.

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. வருகைக்கு நன்றி.

 
At 7:04 PM, Blogger சிவா said...

தங்ஸ்! //** யார கேட்டு முடிவு பண்ணுனீங்க? இனி வாரம் ஒரு பதிவுன்னு **/// :-)) மன்னிக்கனும்..மன்னிக்கனும்..ஒங்க கிட்ட எல்லாம் சொல்லாம முடிவு பண்ணிட்டேன்..கொஞ்சம் மத்த வேலையையும் பார்க்கலாம் என்று தான். கோவிச்சுக்காதீங்க தங்ஸ்..புராணம்-ல ஒன்னு, இங்கே ஒன்னு என்று வாரம் ரெண்டு பதிவு போடறேனே :-)).

 
At 7:20 PM, Blogger சிவா said...

ராகவன்! //** இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் ஜதி மட்டும் பாடிய மிகப்பிரபலமான பாடல் தெரியுமா? **// ஐய்யா! இதெல்லாம் உங்களுக்கே நல்லதா படுதா..ம்ம்ம்ம்..யோசிக்கறேன்..அதுக்குள்ள உஷா அக்கா காப்பாத்தினாலும் காப்பாத்தலாம்..சீக்கிரம் ப்ளாக்க ஆரம்பியும் ஐயா..தனிமடல் ஒன்னு அனுப்பறேன்..நாளைக்கு.

 
At 8:57 PM, Blogger G.Ragavan said...

// உஷா அக்கா! ராகவனிடம் இருந்து என்னிய காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி :-). அவரு பாக்குறதுக்கு தான் சின்ன பையன் மாதிரி இருக்காரு..கேள்வி கேட்டா ஒரே 70S 80S வாடை..நம்ம அறிவுக்கு ஏத்த மாதிரி கேள்வி கேட்க மாட்டேங்கிறார் :-)) //

அவசரப்படாதீங்க சிவா. நீங்க இளையராஜான்னு சொல்றதால 70 80 வாடை அடிக்குது...விட்டா அம்பதுல இருந்தே வாடையடிக்கும்.

 
At 9:00 PM, Blogger G.Ragavan said...

Ragavan, Jayachandran - Jadhi matum padiya song,

// Enaku munnal en amma kandu pdichutanga!!

Film : Punnagai Mannan

Song : Kavidhai kelungal

Correcta? //

ரொம்பச் சரி உஷா. அந்தப் பாட்டை வாணி ஜெயராம் பாடியிருந்தாலும் நடுவில் வரும் ஜகன ஜகன ஜம் ஜம்மும் ஹான்னு வர்ர சுரங்களும் ஜெயச்சந்திரன் பாடியதுதான். (இந்தப் பாட்டைக் கேட்டுட்டு அவரு கோடு போட்டாப்புல பாடுறாரா ரோடு போட்டாப்புல பாடுறாரான்னு சிவா சொல்லலாம் :-) )

// Dear Siva,
Jayachandran voice enaku romba pidikum. //

எனக்குந்தான்...

// Azhagae unnai aradhikiraen - Azagae Unnai Aradhanai seigiren - nu matumae song madhiri varum .Beautiful song - Beautiful voice by JC!! //

உண்மை. நினைத்தாலே இனிக்கும்னு ஒரு பாட்டு உண்டு. பாட்டு முழுக்க நினைத்தாலே இனிக்கும். அதுமாதிரி இது பாட்டு முழுக்க அழகே உன்னை ஆராதனை செய்கிறேன். ரொம்ப நல்லா சொகுசா இருக்கும். அடுத்த புதிர அடுத்த திரியில போடுவோம்.

 
At 3:59 AM, Blogger சிவா said...

நன்றி உஷா அக்கா! விடையை சொல்லிட்டீங்க. பேசாம அடுத்த பதிவு ஒரு போட்டியா போட்டுடலாம்னு நெனைக்கிறேன். ராகவனுக்கு ஏத்த மாதிரி 90க்கு அப்புறம் வந்த மாதிரி ஒரு கேள்வி கேட்கலாம் :-))..

 
At 4:00 AM, Blogger சிவா said...

ராகவன்! //** விட்டா அம்பதுல இருந்தே வாடையடிக்கும். **// ஐயா! இதெல்லாம் ரொம்ப ஓவர். அப்புறம் நீங்க சொல்ற மாதிரியே நான் ஓஓன்னு அழுதிருவேன் :-))

'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்' பாடல் அடுத்த பதிவில் கண்டிப்பா போட்டுடறேன். நம்ம விருப்பமா.

 
At 7:27 AM, Blogger G.Ragavan said...

// நன்றி உஷா அக்கா! விடையை சொல்லிட்டீங்க. பேசாம அடுத்த பதிவு ஒரு போட்டியா போட்டுடலாம்னு நெனைக்கிறேன். ராகவனுக்கு ஏத்த மாதிரி 90க்கு அப்புறம் வந்த மாதிரி ஒரு கேள்வி கேட்கலாம் :-)).. //

சிவா....90க்கு அப்புறம் வந்த இளையராஜா பாட்டுன்னா லேசா முழிப்பேன். ஆனா ஏ.ஆர்.ரகுமான், தேவா பாட்டுன்னா.... :-)


// ராகவன்! //** விட்டா அம்பதுல இருந்தே வாடையடிக்கும். **// ஐயா! இதெல்லாம் ரொம்ப ஓவர். அப்புறம் நீங்க சொல்ற மாதிரியே நான் ஓஓன்னு அழுதிருவேன் :-)) //

வேண்டாம். வேண்டாம். தாங்கள் அழ வேண்டாம். திருநெல்வேலி குஞ்சரமணி தேவி அவர்கள் வீ.என்.ஜானகிக்காக பாடிய முதல் பாடல் எதுன்னல்லாம் நான் கேக்க மாட்டேன். பயப்படாதீங்க........

// 'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்' பாடல் அடுத்த பதிவில் கண்டிப்பா போட்டுடறேன். நம்ம விருப்பமா. //

கண்டிப்பா போடுங்க. அப்படியே...அந்த "எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ" அதையும் போடுங்க....

 
At 3:32 AM, Blogger சிவா said...

//** 90க்கு அப்புறம் வந்த இளையராஜா பாட்டுன்னா லேசா முழிப்பேன். ஆனா ஏ.ஆர்.ரகுமான், தேவா பாட்டுன்னா.... :-) **// நான் தேவா பாட்டுன்னா முழிக்க மாட்டேன். படுத்து தூங்கிருவேன் :-))

//** திருநெல்வேலி குஞ்சரமணி தேவி அவர்கள் வீ.என்.ஜானகிக்காக பாடிய முதல் பாடல் **// வர வர நம்ம பார்த்திபன்-வடிவேலு ரேஞ்சில ஆக்கிருவீங்க போல..ஒம்ம கிட்ட பார்த்து தான் பேச வேண்டிய இருக்கு :-))

//** "எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ" **// படம் பேர சொல்லும் ஓய்..எனக்கு பாட்டு புடிபடலை (எப்படியும் என்னிடம் இருக்கப் போறது இல்ல :-))

 
At 7:34 PM, Anonymous Anonymous said...

Dear Siva,
Ragavan sonna song "Engum niraindha
iyarkaiyin enna sugamo"

Film : Idhu eppadi iruku

IR in 15 padangalil onru i think- Black and white film!
Sung by KJY and SJ!!

With LOve,
Usha Sankar.

 
At 8:29 PM, Blogger G.Ragavan said...

// Dear Siva,
Ragavan sonna song "Engum niraindha
iyarkaiyin enna sugamo"

Film : Idhu eppadi iruku

IR in 15 padangalil onru i think- Black and white film!
Sung by KJY and SJ!! //

ஓ! படத்தோட பேரு இது எப்படி இருக்கா! நல்லாத்தான் இருக்குன்னு சொல்லனும். இந்தப் பாட்டு கேட்டுப்பாருங்க சிவா...கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும். ஜானகி பாடி பிடிச்ச பாட்டுகள்ள இதுவும் ஒன்னு.

இந்தப் பாட்டை ரெண்டு வாட்டி டீவீல போட்டாங்க. கருப்பு வெள்ளைதான். ஜெய்சங்கரும் ஸ்ரீதேவியும் சேந்து நடிச்ச படம். பாட்டைக் கேட்டதுமே இசை இளையராஜான்னு தெரிஞ்சி போச்சு.....நேத்து வேர்ல்டு ஸ்பேஸ்ல இந்தப் பாட்டப் போட்டாங்க...பட்டுன்னு ரெக்கார்ட் பண்ணிக்கிட்டேன். ஆனா வேவ் ஃபைலா இருக்கு...

 
At 4:11 AM, Blogger சிவா said...

//** பட்டுன்னு ரெக்கார்ட் பண்ணிக்கிட்டேன். ஆனா வேவ் ஃபைலா இருக்கு **// ராகவன்! அந்த ஃபைல அனுப்பி வையுங்க. நான் எப்படி வேணும்னாலும் மாற்றி தரேன்.

 
At 1:48 PM, Blogger Jeyapalan said...

அட இப்பத் தான், ஜெயச்சந்திரன் பாடல்களைப் பற்றியும் எழுதுங்கள் என்று ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். இங்கே பார்த்தால் அதுவும் உண்டு.

// ஜெயசந்திரனை பற்றி சொல்லனும்னா, ஒரே நேர் கோட்டில் பாடும் (அங்கன இங்கன ஏத்தம் எறக்கம் இல்லாம) சில பாடகர்களில் ஒருவர்.//

தவறு.

"மலரோ நிலவோ மலை மகளோ
தேவி வடிவாக அமைந்தவள் நீயோ"

என்றொரு பாடல் மிக அருமை. ஏற்ற இறக்கமும் உண்டு

 
At 5:21 PM, Blogger சிவா said...

ஜெய்பால்! பழைய பதிவுகளை புரட்டிப் பார்ப்பதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் ஜெயசந்திரனை பற்றி கூறியவுடன் இந்த பதிவை பற்றி தான் கூறலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்களே கண்டுபிடித்து விட்டீர்கள் :-). ஜெயசந்திரன் குரல் பொதுவாக அச்சுப்பிசகாமல் நேர்கோட்டில் செல்லும். அதை தான் சொன்னேன். நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் என்ன படம் என்று சொன்னால் வசதியாக இருக்கும். எனக்கு பாடல் பிடிபட மாட்டேன் என்கிறது
:)

 
At 6:15 PM, Blogger Jeyapalan said...

"மலரோ நிலவோ மலை மகளோ
தேவி வடிவாக அமைந்தவள் நீயோ"

என்றொரு பாடல் மிக அருமை. ஏற்ற இறக்கமும் உண்டு

இதோ:

http://www.4shared.com/audio/9JzcIErO/malarO_nilavO_malaimagaLO.html

 

Post a Comment

<< Home