விடை பெறுகிறேன்.
நண்பர்களே! விடை பெறுகிறேன். என்னடா பதிவு தலைப்பு என்று நெனைச்சிறாதீங்க. கொஞ்ச நாள் இந்த ப்ளாக் உலகத்தில் இருந்து விடுப்பில் போய்ட்டு வரலாம் என்று தோன்றியது. அது தான் இந்த 'விடை பெறுகிறேன்'. காரணம் ஒன்றும் பெரிசு இல்லை.
ரொம்ப நாளைக்கு முன்னாடி என் குரு (அப்படி தான் சொல்வதுண்டு :-) CSR எங்கள் இளையராஜா யாஹு குழுமத்தில் இசை பற்றி சில பாடம் நடத்தினார். என் மண்டையில் ஒன்றும் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். ரொம்ப ஆர்வம் முத்தி போய் மட மடன்னு கடைக்கு ஓடிப்போய் ஒரு யமஹா கீ-போர்ட தூக்கிட்டு வந்து ( Yamaha PSR-275) ஒரு மூனு மாசம் தட்டு தட்டுன்னு தட்டிக்கிட்டு இருந்தேன். (ஒன்னும் தேறலைன்னாலும் ஒரு ஆசை..ஒரு முயற்சி தானே :-)) இப்போ ஒரு வருடமா அந்த கீ-போர்ட் அப்படியே கெடக்குது. சரி அதை மறுபடி எடுத்து கொடுமை படுத்தலாம் என்று ஒரு ஆசை..
அப்புறம் CSR இப்போ மறுபடி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு Westen Classical Music பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டார். சரி! போன தடவை தேறாம போய்ட்டாலும் மறுபடி படிச்சு பார்க்கலாமே என்று இன்னொரு ஆசை...
எதுக்கும் சம்பந்தம் இல்லாம ஒன்னு. ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கலாம்னு தேடினப்போ இந்த கேமிரா கையில் மாட்டியது. SONY DSC-H2. அப்படியே இனையத்தில் தேடிய போது இந்த கேமராவில் எடுக்கப் பட்ட சில படங்கள் கிடைத்தது. மனசுக்குள் இன்னொரு ஆசை வந்துடுச்சு. நாமும் கொஞ்சம் Photography கத்துக்க முயற்சி பண்ணலாமா என்று. அதையும் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா..
இப்படி நிறைய பேராசைகள். இதுக்கெல்லாம் கொஞ்சம் நேரம் தேவை படுகிறது. அதான் கொஞ்ச நாள் இந்த ப்ளாக் வேலைகளில் இருந்து தள்ளி இருக்கலாம் என்று முடிவு செய்தேன்.( போடே..ரொம்ப தான் பில்ட் அப்பு...ஹி ஹி ஹி :-)).
அதுக்கு முன்னாடி உங்களிடம் சில வார்த்தைகள்.
ராஜா என்றால் எனக்கு ரொம்பவே கிறுக்கு. அவர் போட்டோவை வெட்டி ஒட்டி சந்தோச படுவதில் இருந்து, தியேட்டரில் அவர் பெயர் போடும் போது விசில் அடித்து சந்தோச படும் அளவுக்கு ரசிக்கும் ஒரு சராசரி ரசிகன். பாட்டுன்னா ராஜா இசை அமைக்கிறார். ரெண்டு பேர் பாடறாங்க. இதுக்கு மேல இசை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்படி சரக்கே இல்லாம, பாட்டு ப்ளாக் ஆரம்பிக்கும் ஆசை ஏன் வந்தது?
பொதுவாகவே என் ராசியோ என்னவோ என் நட்பு வட்டத்துக்குள் இசையை பற்றியோ, ராஜாவை பற்றியோ, ஒரு சராசரி பாடலை பற்றி கூட ஆர்வத்துடன் பேச நண்பர்கள் கிடையாது. அப்போது கிடைத்தது தான் இந்த ப்ளாக். சரி என்று ஆர்வ கோளாறில் ஆரம்பிச்சு 8 மாசம் ஓட்டியாச்சு. எனக்கு மனசுல என்ன தோனிச்சோ, ராஜா பற்றி, இசை பற்றி பேச ஒரு நண்பன் கிடைத்தால் என்ன பேசுவேனோ, அத்தனையையும் உளறி கொட்டியாச்சு.
எனது நண்பர்களாக, இது வரை அனைத்து பதிவையும் ஆர்வமுடன் கேட்டு என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் கோடி நன்றிகள். ரொம்பவே சந்தோசமா திருப்தியா என் ஆசையை நிறைவேற்றியது நீங்கள் தான். உங்களுக்கு நேரம் இருந்தால், ஏதாவது சொல்லணும்னா gsivaraja@gmail.com க்கு மடல் அனுப்புங்க. சந்தோசமா பதில் அனுப்புகிறேன்.
இதுவரை எத்தனை நண்பர்கள். தவறாமல் எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்கள் ஏராளம். நன்றி நண்பர்களே. நிறைய பேருக்கு கமெண்ட் கொடுக்க நேரம் இருப்பதில்லை. 'நான் உங்கள் ப்ளாக்கை தவறாம படிப்பேன். இப்போது தான் கமெண்ட் கொடுக்கிறேன்' என்று நிறைய நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கும், படித்து விட்டு, பாடலை கேட்டு விட்டு இது வரை கமெண்ட் கொடுக்க நேரம் இல்லாமல் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா திரும்பி வருவேன். அப்பாடான்னு சொல்லிட்டு போய்றாதிய..என்ன :-)
என்றும் அன்புடன்,
சிவா.
-----
CSR ( CSRamasami) எங்கள் யாஹு குழுமத்தில் ஒரு மூத்த உறுப்பினர். தன் நேரத்தை எல்லாம் செலவிட்டு எங்களுக்கு ஒரு மூன்று மாதம் இசை வகுப்புகள் எடுத்தார். இப்போது அந்த சேவையை ப்ளாக் மூலமாக செய்து வருகிறார். இங்கே சென்று பாருங்களேன்.
இளையராஜாவுக்கு தனியாக கடிதம் போட்டு ஒவ்வொரு பாடலையும் பற்றி இசை விமர்சனம் கொடுத்து, ராஜாவும் மூன்று பக்கம் பதில் விளக்கம் கொடுத்து கடிதம் எழுதுவார். 'நான் இன்று டெல்லி செல்கிறேன். 3 நாளில் வந்து விடுவேன்' என்று கடிதத்தில் ராஜா கூறி செல்லும் அளவுக்கு அவரிடம் கடித தொடர்பில் இருந்த ஒரு ரசிகர் தான் CSR. ஆச்சரியமா இருக்கு இல்லையா. இங்கே போய் படிச்சி பாருங்க.
சரி..வரட்டாடே...