பாசில் - இளையராஜா
நண்பர்களே! போன வாரம் கமல்-ராஜா கூட்டணியில் சில பாடல்களை கேட்டோம். பதிவில் பின்னூட்டங்களை பார்க்கும் போது, பதிவு அந்த கூட்டணி மாதிரியே சூப்பர் ஹிட் ஆகி விட்டது. நண்பர் சாணக்கியனுக்கு தான் நன்றி சொல்லணும்.
இந்த வாரம் ஒரு இயக்குனர்-ராஜா கூட்டணியை எடுத்து பாடல் போடலாம் என்று நினைத்தேன். இயக்குனர் என்றால் ஒரு பெரிய பட்டியல் வரும். பாரதிராஜாவில் தொடங்கி, மணிரத்னம், ஆர்.வி.உதயகுமார் என்று நிறைய இருக்கிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே தொடக்கம் முதல் இன்று வரை ஒரு படம் விடாமல் ராஜாவின் இசையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் இடம் இயக்குனர் பாசிலுக்கு தான். பூவே பூச்சூடவா- வில் ஆரம்பித்து 'ஒரு நாள் ஒரு கனவு' வரை இந்த கூட்டணி சிதறாமல் தொடர்கிறது. நான் இங்கு எடுத்துக் கொள்வது தமிழ் படங்கள் மட்டும் தான். பாசில் மலையாளத்தில் ரொம்ப அரிதாகவே ராஜாவை பயன்படுத்தி இருக்கிறார் (மலையாளம் 'காதலுக்கு மரியாதை' (Aniyathi Pravu) யே ராஜா கிடையாது). ஆனால் தமிழில் ராஜா இல்லாமல் பாசில் படம் இயக்கியது இல்லை.
பாசிலிடம் எனக்கு பிடிக்காத ஒன்று. யேசுதாஸ். விஜய் ஹீரோவாக இருந்தாலும் சரி, வடிவேலு ஹீரோவாக இருந்தாலும் சரி. கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் யேசுதாஸ் தான் பாட வேண்டும். போனால் போகட்டும் என்று மற்ற பாடகர்களுக்கு சில சமயம் வாய்ப்பு கிடைக்கும் (எஸ்.பி.பி-க்கே சான்ஸ் அரிது தான்). இது எனக்கு பாசில் படப்பாடல்கள் எல்லாமே ஒரே அச்சில் வார்த்த கொழுக்கட்டை மாதிரி ஒரே மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும்.
பாசில் படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பாடலை இந்த பதிவில் கேட்கலாம்.
1. பூவே பூச்சூடவா (1985)
பாசிலின் முதல் தமிழ் படம். இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த ரெண்டு நதியாவும், சின்னக் குயில் சித்ராவும். 'சின்னக் குயில் பாடும் பாட்டு' எப்போதும் எனக்கு பிடித்தப் பாடல். பத்மினி பாட்டியும் நதியா பேத்தியும் பாசமழை பொழிந்த படம். இடையில் வரும் எஸ்.வி.சேகர் வில்லத்தனம் ரசிக்கும் படி இருக்கும். சித்ராவுக்கு விருது கிடைத்த படம் என்று நினைக்கிறேன். சித்ராவின் இளம் குரலில் 'பூவே பூச்சூடவா' பாடல்.
2. பூவிழி வாசழிலே (1987)
பாசில் படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்தபடம் இது தான். முதல் படத்தில் செண்டிமெண்ட் கொடுத்தாலும், அடுத்த படத்திலேயே ஒரு த்ரில்லரை, அதுவும் கொஞ்சம் கூட பிசகாமல் பக்காவாக கொடுத்திருப்பார் பாசில். முதல் காட்சியில் அந்த குழந்தை ஒரு கொலையை பார்க்க, அதன் அம்மா கொல்லப்படும் காட்சியில் இருந்தே படம் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும். ரகுவரன் & கோ அந்த குழந்தையை சத்தியராஜிடம் இருந்து கடத்த முயலும் ஒவ்வொரு காட்சியும் அக்மார்க் த்ரில்லர். பாடலாகட்டும் பின்னணி இசை ஆகட்டும் ராஜா கலக்கி இருப்பார். வழக்கம் போல இரண்டு யேசுதாஸ் பாடல். ராஜா கலக்கி இருந்த மலேசியா வாசுவின் 'பாட்டிங்கே' (க்ளப் பாடல்) அவ்வளவாக எடுபடாததில் எனக்கு வருத்தமே. அதுக்கு என்ன! நம்ம ப்ளாக். அந்த பாடலை போட்டுட்டா போச்சு.
இந்த பாடலை இப்போது அப்படியே வாசிக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். இந்த ராஜா எங்கே போனார்? இந்த மாதிரி இசை கருவிகளை ஏன் இப்போது பயன் படுத்த முடிவதில்லை? எல்லாமே சில கீ-போர்டுக்குள் அடங்கி விட்டதா? இந்த பாடலை கேட்கும் போது இப்படி 100 கேள்விகள் என் மனதில் எழும்பும். ஒவ்வொரு இசை கருவிகளையும் அணு அணுவாக ரசிக்கலாம். ட்ரம்ஸ், பேஸ் கிடார், ஹம்மிங் என்று ஒரு இசை கலக்கல். மலேசியாவும் சைலஜாவும் அருமையாக பாடி இருப்பார்கள். பாடல் இதோ.
3. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)
மீண்டும் சத்யராஜை வைத்து, ஆனால் ரொம்பவே மலையாள வாடையோடு ஒரு அம்மா செண்டிமெண்ட் வைத்து வந்த படம் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு'. சுமாரான ஒரு படம். ரொம்ப சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. 'குயிலே குயிலே குயிலக்கா' சித்ரா-யேசுதாஸ் குரலில் இந்த பாடல்.
4. வருஷம் 16 (1989)
பட்டித்தொட்டி எல்லாம் கலக்கிய ஒரு படம். அப்போது எங்கு பார்த்தாலும் வருஷம்-16 தான். 'தர்மத்தின் தலைவன்' படத்தில் முதலில் வந்திருந்தாலும், குஷ்புவுக்கு கேவில் கட்ட அஸ்திவாரம் போட்ட ஒரு படம். கண்ணன்-ராதிகா-ராஜாமணி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்போதும் நம் மனசுக்குள் நிற்கும். குடும்பம்-செண்டிமெண்ட்-காதல்-காமெடி என்று அம்சமாக கொடுத்திருப்பார் பாசில். ராஜாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கும். 'பழமுதிர் சோலை எனக்காக தான்'..ம்ம்ம்ம்..இந்த பாடலையாவது எஸ்.பி.பி கிட்ட கொடுத்திருக்லாம்ல..ம்ம்ம்ம்...சரி சரி..யாரு பாடினா என்னா..பாட்டு நல்லா இருந்தா சரி..
5. அரங்கேற்ற வேளை (1990).
பாசில் முதல் முதலாக செண்டிமெண்ட்-அ ரொம்ப குறைத்து, முழுவதும் நகைச்சுவையாக கொடுத்த படம். கொஞ்சம் நாடகத்தனமா இருக்கும் (படமே நாடக கொட்டாய்ல நடக்கிற மாதிரி தானே). துறுதுறு ரேவதி, பிரபு. இவர்களுக்கு இடையே வி.கே.ராமசாமி படும் பாடு என்று நம்மை நல்லாவே சிரிக்க வைக்கும் நிறைய காட்சிகள் உண்டு. என்னோட பேவரைட் உமா ரமணனோட 'ஆகாய வெண்ணிலாவே' கலக்கல் பாடல். மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். எல்லோருக்கும் பிடித்த 'ஆகாய வெண்ணிலாவே' பாடல்.
6. கற்பூர முல்லை (1991)
'என்டே சூர்யபுத்திரிக்கு' மலையாளத்தில் பாசில் எடுத்த படத்தின் தமிழ் வடிவம் 'கற்பூர முல்லை'. டப்பிங்கா, இல்லை இரண்டையும் ஒரே சமயத்தில் எடுத்தாரா என்று தெரியவில்லை. நான் படமும் இன்னும் பார்க்கவில்லை. பாடலை கேட்டவரைக்கும், அமலா ஸ்ரீவித்யாவின் மகளாக வருவார், ஆனால் ஸ்ரீவித்யா அதை காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பார் என்று நினைக்கிறேன். மறுபடியும் யேசுதாஸ் :-). ஒரு அருமையான பாடல். யேசுதாஸ்-சுசிலா-சித்ரா பாடியது. 'பூங்காவியம் பேசும் ஓவியம்'.
7. கிளி பேச்சு கேட்கவா ( 1993)
மலையாள மம்முட்டியோடு பாசில் களம் இறங்கிய படம். நகைச்சுவையாக எடுக்கவா, த்ரில்லராக எடுக்கவா, கிராமத்து கதை மாதிரி எடுக்கவா என்று ரொம்பவே குழம்பி நம்மையும் குழப்பி இருப்பார். மம்முட்டி கிராமத்து வாத்தியாராக வரும் ஆரம்ப காட்சிகள், பேய் பங்களாவுக்கு சார்லியை கூட்டிக்கொண்டு கூத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். மற்றபடி இரண்டு பாடலில் ராஜா படத்திற்கு கொஞ்சம் வெளிச்சத்தை கொடுத்தார். 'அன்பே வா அருகிலே' யேசுதாஸின் க்ளாசிகல் கலக்கல். அடடா! நம்ம எஸ்.பி.பி சிவகாமி நெனைப்பினிலே பாட்டு பாடறார். ( போங்கடே! இந்த பாட்டெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகாதுன்னு யேசுதாஸ் சொல்லிட்டார் போல :-). நான் டி.வில ரொம்பவே ரசித்த பாடல் இந்த சிவகாமி நெனைப்பினிலே. ஆடதெரியாமல் மம்முட்டி ஆடுவதையும், அந்த பெரியவர் ஒரு குடையை பிடித்துக்கொண்டு இரண்டு பேரையும் விரட்டி கொண்டு போவதையும் நிறையவே ரசிக்கலாம். ராஜாவின் ஒரு சில தபேலா ஆட்டம் பாடல்களில் இது ஒரு முத்து.
8. காதலுக்கு மரியாதை (1997)
'என்னப்பா பாட்டு போடறீங்க. நான் போடறேன் பாருங்க பாட்டு' அப்படின்னு ராஜா சொல்லி பாடல்களை கொடுத்தது மாதிரி இருந்தது 'காதலுக்கு மரியாதை' பாடல் வந்த பொழுது. அப்படி ஒரு படம் தயாராவது கூட அவ்வளவாக விளம்பரப்படுத்த படவில்லை. கேசட் வெளியான பொழுது தான், 'என்னடா இது, தலைவர் இசையா இருக்கே..அடடா. பாசில் படமா' அப்படின்னு நெனைச்சிக்கிட்டே வாங்கி கேட்டேன். அப்புறம் தான் படம் வெளி வந்து செம கலக்கு கலக்கிக்கிட்டு இருந்தது. குரோம்பேட்டை வெற்றில ஆடு மாடு பூட்டுற மாதிரி வர்றவங்கள எல்லாம் உள்ள விட்டுக்கிட்டே இருப்பான். ஹவுஸ் புல் போர்ட் எல்லாம் கெடையாது. டிக்கெட்ட வாங்கி உள்ள போனப்புறம் தான் உள்ள நிக்கவே எடம் கெடையாது என்று தெரிந்தது. முட்டங்காலில் நின்னுக்கிட்டே பார்த்த ஒரே படம். ராஜா-பாசில் கூட்டணிக்கு சிகரம் வைத்த ஒரு படம். ராஜாவின் பின்னணி இசை ராஜாங்கம் படம் முழுவதும் பரவி இருக்கும் (முக்கியமா அந்த க்ளைமாக்ஸ் காட்சி, விஜய்-சாலினி பிரியும் காட்சி..நம்ம கண்ணுல டக்குன்னு கண்ணீர் எட்டிப்பார்க்கும்.ம்ம்ம்ம்)..
பாடலை பற்றி எல்லோருக்குமே தெரிந்த விசயம் தான். என்னை தாலாட்ட வருவாளோ ஏற்கனவே பதிவில் பார்த்து விட்டோம். அதனால் 'இது சங்கீத திருநாளோ' கேட்கலாம்.
9. கண்ணுக்குள் நிலவு (2000)
ஒரு படம் பிச்சிக்கிட்டு ஓடிட்டுன்னா, அப்படியே அந்த கூட்டணிய அப்படியே புடிச்சுப் போட்டு காசு பாக்கலாம்ணு கைய சுட்டுக்கொள்வது ரொம்ப சகஜம். 'கிழக்கு சீமையிலே' ஓடினவுடன், நெப்போலியன்-ராதிகா-விஜயகுமார அப்படியே புடிச்சிப் போட்டு 'புதுப்பட்டி பொன்னுத்தாயி' என்று ஒரு குப்பை வந்தது. அது போலவே 'காதலுக்கு மரியாதை'க்கு மக்கள் கொடுத்த மரியாதையை பார்த்து விஜய்-ஷாலினி கூட்டணியில் பாசிலே இயக்கி வந்த படம் 'கண்ணுக்குள் நிலவு'. இந்த படத்தில் விஜயின் நடிப்பை ஆகா ஓஹோ என்று ஆள் ஆளுக்கு பாராட்டும் போதே வெளங்காது என்று தோன்றியது. இந்த படத்தோடு, விஜயும் இனி நடிப்பது முயற்சிப்பது இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டார். நான் இன்னும் படமும் பார்க்கவில்லை.
சொல்லப் போனா, எனக்கு 'காதலுக்கு மரியாதை' பாடல்களை விட 'கண்ணுக்குள் நிலவு' பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ராஜா-பாசில் கூட்டணியில் வந்த பாடல்களில் என் மனதில் முதல் இடம் கண்ணுக்குள் நிலவுக்கு தான். 'காதலுக்கு மரியாதை' கமர்ஷியல். 'கண்ணுக்குள் நிலவு' க்ளாசிகல். ஹரிஹரன் பாடிய 'நிலவு பாட்டு நிலவு பாட்டு' ரொம்பவே வித்தியாசமான கம்போசிங்க். நான் ரொம்பவே ரசிக்கும் ஒரு பாடல். யேசுதாஸின் 'இரவு பகலை தேட' அழகான கவிதை. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான இசை. சரணத்தில் வரும் பேஸ், யேசுதாஸ் குரலோடு சேர்ந்து இதமான ஒரு வருடலை கொடுக்கும். 'ரோஜா பூந்தோட்டம்' மனசுக்குள் இதமான ஒரு ஆட்டம் போடும். எவ்வளவு அழகான ரிதம். உன்னி கிருஷ்ணன்-அனுராதா ஸ்ரீராமின் நீரோடை மாதிரி குரல். பாசில் இந்த பாடலை ரொம்ப அழகாக படமாக்கி இருப்பார். விஜய்-ஷாலினியின் ஆட்டமும், முகபாவனைகளும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். சித்ராவின் 'சின்னஞ்சிறு கிளியே' அருமையான தாலாட்டுப் பாடல். அப்புறம் யேசுதாஸ்-அனுராதா ஸ்ரீராமின் 'ஒரு நாள் ஒரு கனவு' பாடல். இப்படி 'கண்ணுக்குள் நிலவு' ஒரு முழுமையான ராஜாவின் ராஜாங்கம். இன்று 'ரோஜா பூந்தோட்டம்' பாடலை கேட்கலாம்.
10. ஒரு நாள் ஒரு கனவு (2005)
எல்லாமே அழகா இருந்தா திருஷ்டி பொட்டு வைப்பாங்க இல்லையா. அப்படி தான் 'ஒரு நாள் ஒரு கனவு' படத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது. படம் வெளிவரும் முன்னமே பாசில் 'இந்த படம் தான் நானும் ராஜாவும் இனைந்து செய்த படங்களிலேயே ஒரு இசை காவியம்' என்று சொன்ன போதே நான் டவுட் ஆனேன். இவரு ராஜா கூட செய்த பாடங்கள் எல்லாமே இசை காவியம் தானே. இப்படி ஓவரா பில்ட்-அப் கொடுக்கறாரே என்று. இந்த படத்துக்கு இயக்கம் 'இராமநாராயணன்' என்று சொன்னால் கூட நம்புவது கஷ்டம் தான். அவ்வளவு சுமாரான திரைக்கதை, இயக்கம். 'காற்றில் வரும் கீதமே' தவிர எல்லாமே சுமார் தான். கொஞ்சம் நல்லா இருந்த 'கஜுரகோ' பாட்டையும் படத்தில் கொடுமை படுத்தி இருப்பார் (இவ்வளவு கேவலமா ஒரு பாடலை நான் பார்த்தது இல்லை). என்னத்த சொல்ல, கடைசியா 'காற்றில் வரும் கீதேமே' கேட்டுட்டு முடிச்சிக்கலாம். நண்பர் சாணக்கியன் விருப்பமாக இந்த பாடலை கொடுக்கிறேன்.
அன்புடன்.
சிவா.