மழை வருது..மழை வருது..
அவன் அவன் கத்திரி வெயிலில் காய்ந்து கெடக்கறான்..எங்கடா மழை வருதுன்னு பாக்கறீங்களா..நம்ம ஊர்ல மழை வருதுன்னு வானிலை அறிவிப்பு கொடுத்தாலே, வருண பகவான் திரும்பி பாக்காம ஓடிருவார். நாஞ்சொல்லியா வரப்போறார். இது மழை பாடல் பற்றிய இசை மழை.
ரெண்டு நாளா வெளியே எங்கேயும் போக முடியலீங்க. விடாது அடிக்கும் அடை மழை இங்கே..(அமெரிக்காவில்). அப்படியே சரி நாமும் ரெண்டு மழை பாட்டு போடலாம்னு தான் ஆரம்பிச்சாச்சு.
மழை என்றாலே என்ன ஒரு உற்சாகம். மழை வரப்போவதற்கு முன் வரும் அந்த மண் வாசனை. மழையில் நனைவது தான் என்ன ஒரு ஆனந்தம். எனக்கு மழையில் நனைவதுன்னா உயிர். நல்லா சொட்ட சொட்ட நனைஞ்சிட்டு வீட்டுக்கு போனவுடன், வாசலிலேயே டவலோடு காத்துக்கிட்டு இருக்கிற அம்மாக்கிட்ட ஒரு திட்டு கெடைக்குமே (இப்போ பொண்டாட்டிக்கிட்டட :-)). அதுவும் சுகம் தான். அதிலும் சைக்கிளில் போகும் போது மழையில் மாட்டிக்கிட்டா ஜாலி தான். ஏன்னா குடை பிடிக்க முடியாது. அந்த சாக்கில நல்லா நனையலாம். தலையெல்லாம் நனைஞ்சி மூஞ்செல்லாம் தண்ணி தெரிக்க, அப்படியே துடைச்சிக்கிட்டு, ஓடுற மழை நீரில் சைக்கிள் ஓட்டும் சுகம் கோடி கொடுத்தாலும் கிடைக்குமா.ம்ம்ம்..
இதெல்லாம் தெரியாத சில பயலுவ, சின்னதா ஒரு நாலு துளி விழுறதுக்கு முன்னாடியே குடையை புடிச்சி வரப்போற மழையையும் வெரட்டி விட்டுடுவானுங்க. இங்கே பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது சின்ன சின்ன தூறல் விழ குடை புடிக்காமல் அப்படியே அன்னாந்து பார்த்துக்கிட்டே நிற்பேன் (இடி விழாம இருக்கக் கடவது). சுகமோ சுகம்.
கல்லூரி முடிக்கும் வரை நெனைச்சா (வருண பகவான் மனசு வச்சா) சொட்ட சொட்ட நனைச்சுக்கிறது. வேலைக்கு சேர்ந்தவுடம் கைல நாலு காசு வந்தது. பர்ஸ் என்று ஒன்று பைக்குள் தொற்றிக்கொண்டது. அதற்கும் லைசன்ஸ், கிரெட் கார்டு என்று சில சமாசாரங்கள். கனத்த மழை என்றால் நனைய முடிவதில்லை. ஐயோ நனைஞ்சிருமேன்னு ஓட வேண்டிய இருக்கு :-)) வாழ்க்கை வசதி பெருக பெருக நல்ல நல்ல சந்தோசங்களை காவு கொடுக்க வேண்டியதா போகுது..ம்ம்..சரி சரி! பாட்டுக்கு போகலாம்
மழையில் பாடுற பாட்டு நிறைய இருக்கு. நம்ம சினிமாவுல ஹீரோயின மழைல நனைய விடுறதே பாதி டைரக்டர்களுக்கு வேலை. அதில் உருப்படியா ஒரு மூன்று பாடல்களை கொடுக்கிறேன்.
முதலில் 'புன்னகை மன்னன்' படத்தில் இருந்து 'வான் மேகம்..பூப்பூவாய் தூவும்'. ராஜாவே இந்த அளவுக்கு ரொம்ப அழகாக ட்ரம்ஸ்-ஐ பயன் படுத்தி இருப்பது சில பாடல்களுக்கு தான். இந்த பதில் வரும் மூன்று பாடல்களுக்கும் இது பொருந்தும். பாடல் நமக்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும். சித்ராவின் அழகான குரலில் பாடல் இதோ.
இரண்டாவதாக, மீண்டும் ரேவதி பாடல் தான் (திரையில் டீசண்டா மழையில் நனைந்த ஒரே நடிகை இவங்களா தான் இருக்கும்). மௌனராகத்தில் இருந்து 'ஓஹோ..மேகம் வந்ததோ'. இந்த பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்தவர் என்னமா Enjoy பண்ணி வாசித்திருப்பார் (குறிப்பா 'பூக்கள் மேல் நீர் துளிகள் வெண்பாக்கள் பாடாதோ' முடிக்கும் போது). இதுவும் ராஜாவும் அனைத்து வித்தைகளையும் ரசித்துக்கேட்க கூடிய பாடல். இந்த முறை ரேவதிக்கு பாடுவது எஸ்.ஜானகி.
அது என்ன..பொண்ணுங்க மட்டும் தான் மழையில் நனைஞ்சிக்கிட்டே பாடுவாங்களா?. இப்போ நம்ம ஹீரோ பாடும் ஒரு கலக்கல் பாடல். என்ன பாட்டு சொல்லுங்க..அதே தான்..'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு'. மழை சத்தத்தில் ஆரம்பிக்கும் Prelude..அப்படியே இடி சத்தம் வந்து அப்படியே ஒரு ட்ரம்ஸ்க்கு தாவும். அருமை. பல்லவியில் எஸ்.பி.பி கூடவே பாடி வரும் கிடாரின் அழகை பற்றி நான் சொல்லாம போனா அடுக்குமா. கமலின் ஆட்டமும், எஸ்.பி.பியின் உற்சாகமும் நாமும் மேடையில் ஆடுவதை போல ஒரு உணர்வை கொடுக்கும். ராஜாவின் 100% அக்மார்க் இசை மழை இதோ..