கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, April 30, 2006

மழை வருது..மழை வருது..

அவன் அவன் கத்திரி வெயிலில் காய்ந்து கெடக்கறான்..எங்கடா மழை வருதுன்னு பாக்கறீங்களா..நம்ம ஊர்ல மழை வருதுன்னு வானிலை அறிவிப்பு கொடுத்தாலே, வருண பகவான் திரும்பி பாக்காம ஓடிருவார். நாஞ்சொல்லியா வரப்போறார். இது மழை பாடல் பற்றிய இசை மழை.

ரெண்டு நாளா வெளியே எங்கேயும் போக முடியலீங்க. விடாது அடிக்கும் அடை மழை இங்கே..(அமெரிக்காவில்). அப்படியே சரி நாமும் ரெண்டு மழை பாட்டு போடலாம்னு தான் ஆரம்பிச்சாச்சு.

மழை என்றாலே என்ன ஒரு உற்சாகம். மழை வரப்போவதற்கு முன் வரும் அந்த மண் வாசனை. மழையில் நனைவது தான் என்ன ஒரு ஆனந்தம். எனக்கு மழையில் நனைவதுன்னா உயிர். நல்லா சொட்ட சொட்ட நனைஞ்சிட்டு வீட்டுக்கு போனவுடன், வாசலிலேயே டவலோடு காத்துக்கிட்டு இருக்கிற அம்மாக்கிட்ட ஒரு திட்டு கெடைக்குமே (இப்போ பொண்டாட்டிக்கிட்டட :-)). அதுவும் சுகம் தான். அதிலும் சைக்கிளில் போகும் போது மழையில் மாட்டிக்கிட்டா ஜாலி தான். ஏன்னா குடை பிடிக்க முடியாது. அந்த சாக்கில நல்லா நனையலாம். தலையெல்லாம் நனைஞ்சி மூஞ்செல்லாம் தண்ணி தெரிக்க, அப்படியே துடைச்சிக்கிட்டு, ஓடுற மழை நீரில் சைக்கிள் ஓட்டும் சுகம் கோடி கொடுத்தாலும் கிடைக்குமா.ம்ம்ம்..

இதெல்லாம் தெரியாத சில பயலுவ, சின்னதா ஒரு நாலு துளி விழுறதுக்கு முன்னாடியே குடையை புடிச்சி வரப்போற மழையையும் வெரட்டி விட்டுடுவானுங்க. இங்கே பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது சின்ன சின்ன தூறல் விழ குடை புடிக்காமல் அப்படியே அன்னாந்து பார்த்துக்கிட்டே நிற்பேன் (இடி விழாம இருக்கக் கடவது). சுகமோ சுகம்.

கல்லூரி முடிக்கும் வரை நெனைச்சா (வருண பகவான் மனசு வச்சா) சொட்ட சொட்ட நனைச்சுக்கிறது. வேலைக்கு சேர்ந்தவுடம் கைல நாலு காசு வந்தது. பர்ஸ் என்று ஒன்று பைக்குள் தொற்றிக்கொண்டது. அதற்கும் லைசன்ஸ், கிரெட் கார்டு என்று சில சமாசாரங்கள். கனத்த மழை என்றால் நனைய முடிவதில்லை. ஐயோ நனைஞ்சிருமேன்னு ஓட வேண்டிய இருக்கு :-)) வாழ்க்கை வசதி பெருக பெருக நல்ல நல்ல சந்தோசங்களை காவு கொடுக்க வேண்டியதா போகுது..ம்ம்..சரி சரி! பாட்டுக்கு போகலாம்

மழையில் பாடுற பாட்டு நிறைய இருக்கு. நம்ம சினிமாவுல ஹீரோயின மழைல நனைய விடுறதே பாதி டைரக்டர்களுக்கு வேலை. அதில் உருப்படியா ஒரு மூன்று பாடல்களை கொடுக்கிறேன்.

முதலில் 'புன்னகை மன்னன்' படத்தில் இருந்து 'வான் மேகம்..பூப்பூவாய் தூவும்'. ராஜாவே இந்த அளவுக்கு ரொம்ப அழகாக ட்ரம்ஸ்-ஐ பயன் படுத்தி இருப்பது சில பாடல்களுக்கு தான். இந்த பதில் வரும் மூன்று பாடல்களுக்கும் இது பொருந்தும். பாடல் நமக்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும். சித்ராவின் அழகான குரலில் பாடல் இதோ.



இரண்டாவதாக, மீண்டும் ரேவதி பாடல் தான் (திரையில் டீசண்டா மழையில் நனைந்த ஒரே நடிகை இவங்களா தான் இருக்கும்). மௌனராகத்தில் இருந்து 'ஓஹோ..மேகம் வந்ததோ'. இந்த பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்தவர் என்னமா Enjoy பண்ணி வாசித்திருப்பார் (குறிப்பா 'பூக்கள் மேல் நீர் துளிகள் வெண்பாக்கள் பாடாதோ' முடிக்கும் போது). இதுவும் ராஜாவும் அனைத்து வித்தைகளையும் ரசித்துக்கேட்க கூடிய பாடல். இந்த முறை ரேவதிக்கு பாடுவது எஸ்.ஜானகி.



அது என்ன..பொண்ணுங்க மட்டும் தான் மழையில் நனைஞ்சிக்கிட்டே பாடுவாங்களா?. இப்போ நம்ம ஹீரோ பாடும் ஒரு கலக்கல் பாடல். என்ன பாட்டு சொல்லுங்க..அதே தான்..'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு'. மழை சத்தத்தில் ஆரம்பிக்கும் Prelude..அப்படியே இடி சத்தம் வந்து அப்படியே ஒரு ட்ரம்ஸ்க்கு தாவும். அருமை. பல்லவியில் எஸ்.பி.பி கூடவே பாடி வரும் கிடாரின் அழகை பற்றி நான் சொல்லாம போனா அடுக்குமா. கமலின் ஆட்டமும், எஸ்.பி.பியின் உற்சாகமும் நாமும் மேடையில் ஆடுவதை போல ஒரு உணர்வை கொடுக்கும். ராஜாவின் 100% அக்மார்க் இசை மழை இதோ..


24 Comments:

At 6:38 AM, Blogger G.Ragavan said...

மழைப்பாட்டுகளா..........தமிழ்ல நெறைய மழைப் பாட்டுக இருக்கு. இளையராஜா இசைல மழைப்பாட்டுன்னாலே மொதல்ல வர்ரது "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" பாட்டுதான்.

நீங்க சொன்ன மூனு பாட்டுமே நல்ல பாட்டுகள்.

அதுலயும் ரெண்டு பாட்டுகள் ரேவதிக்கு. கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருக்கும்.

வேற என்ன பாட்டுக இருக்கு....இருங்க ஒரு லிஸ்ட்டு தயாரிக்கிறேன்.

 
At 8:03 PM, Blogger சிவா said...

வாங்க ராகவன்! எனக்கும் 'பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்' (பாயும் புலி?) தான் நினைவுக்கு வந்தது. இன்னொன்னு 'பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்' (இன்று நீ நாளை நான்). ரெண்டுமே கலக்கல் தான். சரி மழைய ரசித்து பாடுற மாதிரி என்று எடுத்து போட்டேன்..லிஸ்ட் தயாரித்து சொல்லுங்க. போட்டுடலாம்.

அன்புடன்,
சிவா

 
At 8:42 PM, Anonymous Anonymous said...

Dear Siva,
Mazhaiyil nanaivadhu patri unga writings - Excellent!!!

Enakum mazhiayil nanaivadhu pidikum.

Unga writings nalae songs ellam spl aga thonugiradhu Siva !! Keep it up!!!

Padalgal ketkum podhu , kudavae, unga writings um ninaivu varum enaku!!!

film - Nayagan

song - Amdhi mazhai megam

Niriaya irukum Siva!!

Ippodhu host panni irukum 3 songs um great nos by IR!!! Nam life il sila vishayangal old agum.Anal IR in isai eppodhum fresh agavae irukum!!! Mudhan mudhalil kettta andha freshness ippodhum padalil irupadhai unargiren.

Thanks for the songs Siva !!

With Love,
Usha Sankar.

 
At 7:02 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! கமெண்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி :-)). உங்கள் தொடர் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி. 'அந்தி மழை நேரம்' (நாயகன்) பாடலும் ரொம்ப நல்ல பாடல் தான். 'அந்தி மழை பொழிகிறது' (ராஜபார்வை) இந்த பதிவுக்கு சரி வருமா :-)).

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி அக்கா.

 
At 9:34 PM, Blogger G.Ragavan said...

அந்தி மழை பொழிகிறது முழுக்க முழுக்க மழைப்பாட்டு இல்லை.

பொன் வானம் பன்னீர் தூவுது - பாட்டும் அருமையான பாட்டே...

துளித்துளித் துளித் துளி மழைத்துளி
தொடத் தொடச் சிலிர்த்தது மலர்க்கொடி என்று ஒரு பாட்டு உண்டு.

வேறென்ன இருக்கு...யோசிக்கிறேன். யோசிக்கிறேன். யோசிக்கிறேன்.

 
At 6:15 AM, Blogger ப்ரியன் said...

சின்னச் சின்ன மழைத்துளிகளைச் சேர்த்து வைப்பேனோ - என் சுவாசக் காற்றே

 
At 5:26 AM, Blogger சிவா said...

சதீஷ்!

/Mazhai paadalgal pattiyal poda aarambicha poykitte irrukum..athunaale intha murai naan appadiye vittuten../ இப்படி சொன்ன எப்படி சதீஷ்! உங்க ரசனையில் பட்டியலை கொடுத்தா நானும் நாலு பாட்டு தெரிஞ்சிக்குவேன் இல்லையா :-)

 
At 5:29 AM, Blogger சிவா said...

ராகவன்! பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ரொம்ப நல்ல பாடல். என்னிடம் இல்லை. சில சமயங்களில் டி.வி-ல வரும் போது பாத்துக்கறதோட சரி!
யோசிங்க..யோசிங்க..யோசிச்சி சொல்லுங்க :-)

 
At 5:32 AM, Blogger சிவா said...

சிவகுமார்! 'சின்ன சின்ன தூறல் என்ன' ரொம்ப அருமையான பாடல். எஸ்.பி.பி அனுபவித்து பாடி இருப்பார். நீங்க சொன்ன மற்ற எல்லா பாடல்களுமே மழை பாடல்கள் தான். காதல், சோகம் என்று எல்லாமும் உங்கள் பட்டியலில் இருக்கிறது. நன்றி சிவகுமார்.

 
At 5:35 AM, Blogger சிவா said...

வாங்க ப்ரியன்! 'சின்ன சின்ன மழைத்துளிகள்' மழை பாடல் தான். அது 'என் சுவாசகாற்றே' தானே?

 
At 11:04 AM, Blogger பாலராஜன்கீதா said...

பொண்ணுக்குத் தங்க மனசு என்ற திரைப்படத்தில் வரும்
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே என்ற பாடலும் வீட்டுக்குள் மழையில் நனைந்துகொண்டே பாடப்படும் பாட்டுதான் என்று நினைவு. யாரேனும் உறுதிப்படுத்துங்களேன்
நன்றி : http://myspb.blogspot.com/2006/04/blog-post_23.html

 
At 9:53 PM, Blogger G.Ragavan said...

கீதா, சரியான பாடலை நினைவு படுத்தினீர்கள். இந்தப் படத்துக்கு இசை ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் இசையமைக்கும் சுதந்திரத்தை இளையராஜாவுக்குக் குடுத்திருந்தார் என்று கேள்வி. கவிஞர் முத்துலிங்கம் சொன்னார்.

இந்தப் பாட்டுக்கு மெட்டைச் சொன்னதுமே "தேன் சிந்துதே வானம்" என்று எடுத்து விட்டாராம் கவியரசர்.

இந்தப் பாட்டைக் கன்னடத்தில் கொடுத்த பொழுது அந்தக் கவிஞர் தக்கி முக்கி கஷ்டப்பட்டு "சென்னாகிதே..." சொன்னாராம். இது இளையராஜா சொன்னது. கவியரசரின் தமிழறிவைப் பற்றிச் சொல்லும் போது.

 
At 7:11 PM, Blogger சிவா said...

வாங்க பாலராஜன் கீதா! ராகவன் உங்க சந்தேகத்தை போக்கிட்டார். அவருக்கு பழைய பாடல் என்றால் கவிஞர் வரை அப்படியே சொல்வார்.

ராகவன்! //இந்தப் படத்துக்கு இசை ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் இசையமைக்கும் சுதந்திரத்தை இளையராஜாவுக்குக் குடுத்திருந்தார் என்று கேள்வி. // உண்மையா ராகவன்! அப்போ அந்த படத்துக்கு ராஜா இசை இல்லையா..இல்லை கன்னடத்தில் வேற படம்..தமிழில் வேற (முழு ராஜா இசையில்) படமா?

 
At 11:15 PM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

அந்திமழை சரிவந்தா, மழைமழை புது மழை யும் பொருந்தும் தானே?

மேகம் கருக்குது..மழைவரப்பாக்குது.. பாட்டும் மழை பத்திதானே? பாட்டு மீதி மறந்துவிட்டது.

//பர்ஸ் என்று ஒன்று பைக்குள் தொற்றிக்கொண்டது. அதற்கும் லைசன்ஸ், கிரெட் கார்டு என்று சில சமாசாரங்கள். கனத்த மழை என்றால் நனைய முடிவதில்லை. ஐயோ நனைஞ்சிருமேன்னு ஓட வேண்டிய இருக்கு :-))//
சரியாச் சொன்னீங்க. ஊருக்கு நிறைய நாளைக்குப் பிறகு வந்த அண்ணனுடன் மழையில் நனைந்தபடியே நடக்கலாமா என்று கேட்டதற்கு சட்டைப்பையிலிருக்கும் முக்கியமான அடையாளப்பத்திரங்கள் நனைந்து விடும். நனைய முடியாது என்று சொன்னார். அதைக் கேட்டதும் எழுந்த ஏமாற்றம் இன்னும் ஞாபகமிருக்கிறது. அப்ப கோவங்கோவமா வந்துது. இப்பத்தான் அவரு நிலை புரியுது! :O|

 
At 2:47 PM, Blogger சிவா said...

'மழை' ஸ்ரேயா! முதல் வருகைக்கு நன்றிங்க. 'மழை மழை புது மழை' என்ன பாட்டு..என்ன படம். தெரியலையே.

ஆமாம். 'மேகம் கருக்குது..மழை வரப்பாக்குது' சூப்பர் பாட்டு. அதிலும் ஜானகி உரையாடலில் ஆரம்பிக்க யேசுதாஸ் எடுத்து செல்வது ரொம்ப அழகா இருக்கும். பாடலை நினைவு படுத்தியதுக்கு நன்றி.

//அதைக் கேட்டதும் எழுந்த ஏமாற்றம் இன்னும் ஞாபகமிருக்கிறது. அப்ப கோவங்கோவமா வந்துது.// அவரை விட்டுட்டு நீங்க ஜாலியா நனைய வேண்டியது தானே :-)). பர்ஸ் இருந்தா முதல் தடங்கல் அது தான் :-((

 
At 4:47 PM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

மழைன்னு கண்டதும் ஓடியாந்துட்டேன் :O)

மழை மழை புது மழை - சித்திரம் பேசுதடி ல. மேகம் கருக்குது பாட்டு எந்தப்படத்திலே?

அண்ணன் கூட மழையிலே நனைய வரலேன்னு கோவிச்சுட்டு நான் நனையப் போனதும் மழை நின்னு போச்சு! :O(

 
At 8:34 PM, Blogger சிவா said...

'மழை' ஸ்ரேயா! ஓ! நீங்க 'மழை' ஸ்ரேயா இல்லையா..அதான் வந்துட்டீங்க போல. அது எனக்கு தோனவே இல்லை..

'மேகம் கருக்குது' பாடல் 'ஆனந்த ராகம்' படத்தில் வருகிறது. யேசுதாஸ் பாடல். முடிந்தால் சீக்கிரம் உங்கள் விருப்பமாக போட்டுடறேன்.

அன்புடன்,
சிவா

 
At 1:12 AM, Blogger G.Ragavan said...

// வாங்க பாலராஜன் கீதா! ராகவன் உங்க சந்தேகத்தை போக்கிட்டார். அவருக்கு பழைய பாடல் என்றால் கவிஞர் வரை அப்படியே சொல்வார். //

ஹி ஹி....ரகுமானோட ஆரம்ப காலப் படங்களுக்கும் அப்படிச் சொல்வேன். அப்பல்லாம் நான் தீவிர ரகுமான் ரசிகன். கூடப் படிக்கிற பயகள்ளாம் எளையராஜாம்பானுக. ஆனா நாந்தான் இனிமே ரகுமாந்தாண்டா...எழுதி வெச்சுக்கோங்கம்பேன்.

// ராகவன்! //இந்தப் படத்துக்கு இசை ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் இசையமைக்கும் சுதந்திரத்தை இளையராஜாவுக்குக் குடுத்திருந்தார் என்று கேள்வி. // உண்மையா ராகவன்! அப்போ அந்த படத்துக்கு ராஜா இசை இல்லையா..இல்லை கன்னடத்தில் வேற படம்..தமிழில் வேற (முழு ராஜா இசையில்) படமா? //

இந்தப் படத்துக்கு இசை ஜி.கே.வெங்கடேஷ். கன்னடத்தில் இந்தப் படம் இருந்ததா என்று தெரியாது. ஆனா பாட்டு இருந்தது. ஜி.கே.வெங்கடேஷ் இசைன்னாலும் இளையராஜாக்குச் சுதந்திரம் கொடுத்திருந்தாருன்னு சொல்வாங்க. ஜி.கே.வெங்கடேசும் மெல்லிசை மன்னரும் நெருங்க நண்பர்கள். ஜி.கே.விதான் மெல்லத் திறந்தது கதவுல மோகனுக்கு அப்பாவா நடிச்சது. நடுவுல விஸ்வநாதனுக்காக இளையராஜாவ அனுப்பினாராம் ஜி.கே.வி. அப்போ இளையராஜா விஸ்வநாதன் இசையமைக்கிற அழகைப் பார்த்துட்டு அங்க போய் புகழ்ந்து தள்ளீட்டாராம். (இதுவும் இளையராஜா சொன்னதுதான்.) கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

அது சரி...எப்ப இளையராஜா இசையில எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன ஒரே பாட்ட ஒங்க வலைப்பூவுல போடப் போறீங்க?

 
At 4:56 AM, Blogger சிவா said...

ராகவன்! அழகழகா சம்பவங்கள் எல்லாம் எடுத்து விடறீங்க. சே! எனக்கு ஒன்று கூட தெரியாது..பாட்டு பாட்டு...இப்படி பாட்டு கேக்கறத விட்டா வேற எதையும் யோசிக்கிறது இல்லை. அதுக்கு தான் உங்களை பாட்டு ப்ளாக் ஆரம்புயும் ஐயா என்று சொல்றேன். கேட்க மாட்டேங்கறீங்க..

எல்.ஆர்.ஈஸ்வரியா...ராஜா இசையிலா...யோய்..கொஞ்ச நாளா என்னிய கவுக்காம இருந்தீரு..இப்போ ஆரம்பிச்சிட்டீரா :-)).. சரி..சரி...பாட்டும் படமும் சொல்லிட்டு போங்க..கெடைக்குதா என்று பார்க்கிறேன். :-)

 
At 6:38 AM, Blogger Sivabalan said...

நல்ல பதிவு!!

 
At 9:54 AM, Blogger பாலராஜன்கீதா said...

அன்புள்ள ஜிரா,

http://www.rakkamma.com/filmsongsbycat.phtml?female=1&singerid=17

இந்தச் சுட்டி சுட்டுவது சரியா ?

No. Film Name Song Name Singer(s)
1. En iniya pon nilaave Puthu kadalainnaa kadalai ithu karisakkaattu kadalai Mano L.R.Eswari Chorus
2. Nallathor Kudumbam One and two chachchaa T.M.Soundararajan L.R.Eswari
3. Thiruk kalyaanam Nee mokiniyaa Malaysia Vasudevan L.R.Eswari

 
At 7:29 PM, Blogger சிவா said...

நன்றி சிவபாலன்

 
At 5:33 AM, Blogger G.Ragavan said...

// சிவா said...
ராகவன்! அழகழகா சம்பவங்கள் எல்லாம் எடுத்து விடறீங்க. சே! எனக்கு ஒன்று கூட தெரியாது..பாட்டு பாட்டு...இப்படி பாட்டு கேக்கறத விட்டா வேற எதையும் யோசிக்கிறது இல்லை. அதுக்கு தான் உங்களை பாட்டு ப்ளாக் ஆரம்புயும் ஐயா என்று சொல்றேன். கேட்க மாட்டேங்கறீங்க..//

எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. மூனு மாசத்துக்கு சென்னைக்கு வந்துட்டேனே...இங்க இன்னமும் இண்டர்நெட் கனெக்ஷன் இல்லையே....திரும்ப பெங்களூர் போயி இதுக்கு ஒரு முடிவு கெட்டுறேன்.

// எல்.ஆர்.ஈஸ்வரியா...ராஜா இசையிலா...யோய்..கொஞ்ச நாளா என்னிய கவுக்காம இருந்தீரு..இப்போ ஆரம்பிச்சிட்டீரா :-)).. சரி..சரி...பாட்டும் படமும் சொல்லிட்டு போங்க..கெடைக்குதா என்று பார்க்கிறேன். :-) //

அதத்தான் கீதா சொல்லீட்டாங்களே.

 
At 5:37 AM, Blogger G.Ragavan said...

// பாலராஜன்கீதா said...
அன்புள்ள ஜிரா,

http://www.rakkamma.com/filmsongsbycat.phtml?female=1&singerid=17

இந்தச் சுட்டி சுட்டுவது சரியா ?

No. Film Name Song Name Singer(s)
1. En iniya pon nilaave Puthu kadalainnaa kadalai ithu karisakkaattu kadalai Mano L.R.Eswari Chorus
2. Nallathor Kudumbam One and two chachchaa T.M.Soundararajan L.R.Eswari
3. Thiruk kalyaanam Nee mokiniyaa Malaysia Vasudevan L.R.Eswari //

சரியா எடுத்துக் குடுத்தீங்க கீதா...இதுல மொதப்பாட்டுக்குப் பின்னணி இசை மட்டுந்தான் இளையராஜா. மெட்டு மெல்லிசை மன்னர். பாலுமகேந்திரா இயக்கத்துல வெளிவந்திருக்க வேண்டிய படம். என்னாச்சோ...ஏதாச்சோ தெரியலை. என் இனிய பொன்நிலாவே-ன்னு கவித்துவமான பேரு. மெட்டுகளை விசு போட, அந்த மெட்டுகளுக்கு இசைக்கோர்ப்பை ராஜா செஞ்சிருக்காரு. இந்தப் பாட்டுகள நான் ரொம்ப நாளா தேடுறேன். ஆனா கிடைக்கலை. சிவா, ஒரு வழி பண்ணுமய்யா...

மத்த ரெண்டு பாட்டும் இளையராஜா இசைதான்.

 

Post a Comment

<< Home